Monday, August 7, 2017

இப்படி ஒரு ஞாபக சக்தியா? இப்படி ஓர் அனுக்கிரகமா?

"உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.."

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள், தாடி மற்றும் குளோஸ் அப்

(இப்படி ஓர் அனுக்கிரகமா? கோடி ஜன்ம புண்ணியம்
இப்படித்தான் ஒன்று இரண்டு வரும் போலிருக்கிறது.)
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
தரிசனத்துக்காக இரண்டு மணி நேரம் காத்துக்
கிடந்தேன்.தரிசனம் கிடைக்கவில்லை. இனிமேலும்
தாமதித்தால் என்னுடைய அலுவலக வேலைகள்
(நான் இன்ஸ்பெக்‌ஷன் செய்வதற்காக அருகிலிருந்த
ஜங்ஷனுக்கு வந்திருந்தேன்) தடைபட்டுவிடும்
என்பதால், தொலைவிலிருந்தபடியே ஒரு கும்பிடு
போட்டுவிட்டு,என் அலுவலைப் பார்க்க சென்று விட்டேன்.
இரண்டு மணி நேரம் கழித்து, ஸ்ரீ மடத்துச் சிப்பந்தி
ஒருவர் ரயில்வே நிலையத்துக்கு வந்து,பெரியவாள்
அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லியனுப்பியதாகச்
சொன்னார்.
"பெரியவா சொன்னதை அப்படியே சொல்லுங்கோ"
"சதாரா ஸ்டேஷன்லே போய்ப் பார். இன்ஸ்பெக்‌ஷன்
பண்ணிண்டு இருப்பான் அந்த ராமஸ்வாமி.
வரச்சொல்லு என்றார்கள்."
பரபரப்புடன் வேலையை முடித்துக்கொண்டு தரிசனத்துக்கு
சென்றேன். மன்னிப்புக்கோரும் விதமாக, "பெரியவா ரொம்ப
பிஸியாக இருந்தீர்கள்.நான் ஆபீஸ் வேலையை முழுமையாக
முடிக்காமல் ஹெட் குவார்ட்டர்ஸ் போக முடியாது.என்னுடைய
மேலதிகாரி சத்தம் போடுவார்..." என்று ஆரம்பித்தேன்.
பெரியவா என் பதிலை சட்டை செய்ததாகவே தெரியவில்லை!
பட்டென்று," உனக்கு என்ன வேணும்?" என்றார்கள்.
அப்போது என் மனத்தில் ஒரே பிரச்னை தான் இருந்தது -
என் மகள் கல்யாணம்.
"என் பெண்ணுக்கு நல்ல இடத்திலே கல்யாணம் ஆகணும்.அப்பா
ரொம்ப தொந்தரவு பண்றார். அவரும் பல பேர்களுக்கு ஜாதகம்
அனுப்பி, வரன் ஜாதகம் கேட்கிறார்.ரொம்ப பேர் பதில் போடுவதே
இல்லை. வந்த ஜாதகங்கள் பொருத்தமாக இல்லை.."
"அவ்வளவு தானே?... சரி, போ, உன் பெண் கல்யாணத்தை நான்
நடத்தி வைக்கிறேன்.."
இந்த தெளிவான பதில் என்னை அதிர்ந்து போகச் செய்தது.
"நான் நடத்தி வைக்கிறேன்..."
என்மேல் பனிமழை பொழிந்தாற் போலிருந்தது. எதிர்பாராத
இன்பத் தாக்குதலை அனுபவித்தவர்களுக்குத் தான் என்
நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். உடனே சற்றும்
யோசிக்காமல் மகா பாமரத்தனமாக,"சத்தியமாச் சொல்றேளா?"
என்று கேட்டு விட்டேன்.
சத்திய ஸ்வரூபத்திடம் இப்படி ஒரு கேள்வி!
(இப்போது நினைத்தாலும் என் உடம்பு நடுங்குகிறது)
கருணை வள்ளல் மெல்லச் சிரித்தது. அவ்வளவே. இந்த
நிகழ்ச்சி அப்போது என் மனத்தில் ஆழமாகப் பதியவேயில்லை.
நான் ஊருக்குப் போய் என் வேலையில் மூழ்கிவிட்டேன்.
இரண்டு மாதத்துக்குப் பிறகு, மும்பையிலிருந்து ஒரு கடிதம்
வந்தது. என் அப்பா எப்போதோ எழுதிய கடிதத்துக்குப் பதில் -
வரன் ஜாதகத்துடன்.
ஜாதகங்கள் பொருந்தி இருந்தன. மற்ற நடைமுறைகள்
நடந்து கல்யாணமும் நடந்து விட்டது.
இரண்டு வருஷங்களுக்கு மேல் இடைவெளி.
கர்னூலில் ஸ்ரீமடம் முகாம்.
நான், என் பெண், பெண்ணின் குழந்தை - பெரியவா
தரிசனத்துக்குச் சென்றோம்.
பெரியவா காலடியில், அருட்பார்வையில் குழந்தையைப்
போட்டு விட்டு, பெரியவாளின் விசாரணைகளுக்குப் பதில்
சொல்லிக் கொண்டிருந்தோம்.(குழந்தை அதற்குள்
அப்படியே தூங்கிவிட்டது.)
பெரியவா பிரசாதம் கொடுத்ததும் நான், என் பெண்ணுடன்
புறப்பட்டு நாலைந்து தப்படி வைத்து விட்டேன்.
பெரியவா விரலைச் சொடுக்கி கூப்பிட்ட மாதிரி இருந்தது.
திரும்பினோம்.
"இந்த கொழந்தையை மடத்திலே வெச்சுண்டு, நான் எப்படி
சம்ரட்சிக்கிறது? எடுத்துண்டு போ!"
எங்களுக்கு மகா வெட்கம்.பெரியவா தரிசன பேரானந்தத்தில்
குழந்தையை மறந்து விட்டோம்.
என் பெண் ஓடிச்சென்று குழந்தையை எடுத்துக் கொண்டாள்.
அப்போது பெரியவா அருகிலிருந்த ஸ்ரீகண்டன் என்ற
தொண்டரிடம், "ராமஸ்வாமிக்கு திருப்தியான்னு கேளு"
என்றார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


எனக்குப் புரியவில்லை.இப்போது அப்படி ஒரு கேள்வி
எதற்கு? நாங்கள் சந்தோஷமாகத்தானே புறப்பட்டுக்
கொண்டிருக்கிறோம்?
பதில் சொல்ல முடியவில்லை.
"அவன் பெண்ணோட பேரென்னன்னு கேளு"-பெரியவா
"உமா" என்றேன்.
மாப்பிள்ளை பேரு?" -பெரியவா
"சதாசிவன்"...நான்
"சரிதானே?..என்னைக் குத்தம் சொல்லக் கூடாது?
பெயர் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் செய்து
வெச்சுருக்கேன்!.."
என் கண்களில் பொல பொலவென்று நீர் வழிந்தது.
இப்படி ஒரு ஞாபக சக்தியா? இப்படி ஓர் அனுக்கிரகமா?
கோடி ஜன்ம புண்ணியம் இப்படித்தான் ஒன்று இரண்டு
வரும் போலிருக்கிறது

நன்றி :  மஹா  பெரியவா  முகநூல்  பக்கம்.

No comments:

Post a Comment