Monday, May 15, 2017

அக்னி ஹோத்ரம்

சாக்தம்  :- அக்னி  ஹோத்ரம் 


Image result for yagam



             மந்த்ர ஜபங்களை  ஆழ்ந்து , அமர்ந்து  செய்து  பழகியவர்களாலேயே  ஹோமங்களை  முழு  ஈடுபாட்டுடன் , நியதியுடன் , சத்ய நிஷ்டையாக  செய்யமுடிகிறது.

            பஞ்ச  பூதங்களில்  நெருப்பினை  நமஸ்காரம்  செய்ய  தொடங்கிய  மனிதன் ......தன்னுடைய  ஆசைகளை , அபிலாசைகளை , குறைகளை  நெருப்பின்  மூலம்  தெய்வங்களிடம்  சேர்க்கும் ஆகுதிகளை  அளிக்கும்  நியதிகளை, ஒழுங்கு  முறைகளை  ஹோமமாக  வணங்கினான்.

        ஹோமம்  என்பது  நெருப்போடு  பேசுவது. நெருப்பாக  மாறுவது.எங்கும்  நிறைந்த  பரம்பொருளை  அடைவதற்கு  தீயை , நெருப்பினை  ஒரு  தூதுவனாக  பயன்படுத்த  ஏற்பட்டது. அக்னியில்  சமர்ப்பிக்கப்படும்  எல்லா விஷயங்களும்   கடவுளிடம்  போய்ச்சேருதலை  மனிதன்  தெளிவாக  அறிந்து, அதற்கான  வழிமுறைகளை  மிகுந்த  மரியாதையோடு  வணங்கி  கற்றுக்கொண்டான்.  தலைமுறை,  தலைமுறையாக  கடைப்பிடித்தான்.

          மனிதனும் ,  நெருப்பும்  ஒன்றே. நெருப்பு  நிலையானதல்ல. இடையறாது  எரிந்துகொண்டே  இருப்பது, இடையறாது  மாறிக்கொண்டே  இருப்பது. மனித  உடம்பும்  அவ்வாறே !

         இடையறாது  ஒவ்வொரு கணமும்  மாறிக்கொண்டே  முதுமையை  நோக்கி  நகர்ந்துகொண்டே  இருக்கிறது. மனிதன்  நெருப்பினில்  தன்னைக்  காண்பதால் ...........தன்னுடைய  வீர்யம்  போலவே , தன்னுடைய  துடிப்பு   போலவே  நெருப்பினையையும்  காண்கிறான்.  தனக்கு  இருக்கும்  கொடுமையான  எண்ணங்கள்  போலவே நெருப்புக்கும்,  தீய்க்கின்ற   குணம்   இருப்பதாய்  உணர்கிறான். அதனாலேயே  நெருப்பினை  மிகவும்  சினேகமாக்கி  கொள்கிறான்.

          உயிர்  என்பது  ஒரு  சிறிய   மின் துடிப்பு. அந்த  மின்துடிப்பிலிருந்து  சூடு  பறக்கிறது. அந்த  சூடே  உடம்பை  உலவவிடுகிறது. உண்ணவிடுகிறது, உறங்கவிடுகிறது; உழைக்கவிடுகிறது  என்பதும்  புரிந்துபோயிற்று. மனிதன்  நெருப்போடு  கொண்ட  சிநேகம்  தான்  மின்சாரம்.  மின்சாரத்தின்  இன்னொரு  துடிப்புதான்  மின்னணு.

         பூமி  சுழலவும் , பூமியின்  தாவரங்கள்  மேல்நோக்கி  வளரவும்,  பூமிக்குள்  இருக்கின்ற  வெப்பம்தான்  காரணம்.

        நெருப்புக்கு  மிகுந்த  நன்றி  கூறி  அதனை  வணங்கி,  அதன்மூலம்  இயற்கையின்  நன்மைகளையும் ,  தெய்வங்களையையும்  அடைய  காரணமான  நெருப்பினை நெருப்புப்பெட்டி   உருவாகாத  அந்த  காலங்களில்,  சில  குடும்பங்கள்  பாதுகாத்து  வந்தன.  அந்த  அந்தணகுடும்பங்களுக்கு   நெருப்பை  பாதுகாக்கும்  பொறுப்பு  அளிக்கப்பட்டது.

Image result for agnihothram images

                எனவே,  அக்னி  ஹோத்ரம்  செய்பவர்கள்  இல்லங்களில்  எப்பொழுதும்  நெருப்பு  இருக்கும். அந்த  நெருப்பினை  அனையவிடுவதில்லை. ( இன்றும் கூட ) அக்னி  ஹோத்ரம்  செய்வதற்கென்றே  தனியிடம்  இருக்கும். அங்கே நெருப்பினை  வளர்த்து  அக்னியை  மந்திரங்களால்  வழிபட்டு ........அந்த  அக்னியிலிருந்து  சிறு  கங்குகள்  எடுத்து  வீட்டிற்கும் , மற்ற  வீடுகளுக்கு  பயன்படுத்தவும்  அனுப்புவார்கள்.

         பெண்கள்  புடைவைத்தலைப்புகளால்  மறைத்து  விளக்கினால்  அக்னியை  எடுத்துச்சென்று  அவரவர்  இல்லங்களுக்கு  எடுத்துச்செல்வர். எனவே  அந்தணர்  வீட்டினில் அக்னி  எப்போதும்  இருக்கும்.  அக்னி  கேட்டால்  கொடுக்க  வேண்டியது  அந்தணர்  பொறுப்பு. மாட்டேன்  என்று  ஒருபொழுதும்  மறுக்கக்கூடாது. அதேபோல்  அக்னிஹோத்ரிகளை   வழிபடுவதும்,  வாழ்விப்பதும்   மக்கள்  பொறுப்பாகவும்  இருந்தது.

      சாக்தத்தில்  அக்னியின்  பங்கு  காண்போம். பிரபஞ்சத்தில்   ஊடாடும்  சப்தங்களை  உணர்ந்து  அதை  மந்திர  வடிவாக்கி  ரிஷிகள்  கொடுத்தார்கள்  அல்லவா! அந்த  மந்திரங்களை  திரும்ப  திரும்ப,    சொல்லச்சொல்ல  நமக்குள்  ஒரு  புதிய  அதிர்வை  ஏற்படுத்தும். மாறுதலை  நிகழ்த்தும்.  அப்படி  சொல்கின்ற  முறையை  அக்னியோடு ,  ஆகுதியளித்து  மந்த்ரங்களை  சொல்லவைத்தார்கள்.

          மனதை   இன்னும்  ஒருமுகப்படுதலை ,  விரைவாக  சீராக்குதலே , குவித்தலே ........இறுதியாக   அக்னியில்  மனம்  ஒன்றி, ஒன்றி   .....மனம்  ஸ்தம்பிக்கிறது .

Image result for bala atibala mantra in tamil

        வெறுமனே  தனியே  மரத்தடியில்  உட்கார்ந்து  மண்டபத்தில்  உட்கார்ந்து  மந்திர  சொற்களை  திரும்பத்  திரும்ப   சொல்லி  மனதை  ஒருமுகப்படுத்தும்  இன்னொரு வலிமைமிக்க   உபாயமாக  அக்னியை   வளர்த்தல்.

              மணல்  பரப்பி, செங்கல்   வைத்து அதன்மீது  பசுஞ்சாணி  வரட்டியை  அடுக்கி , சுள்ளிகளை  வைத்து  காலம்காலமாய்  தொடர்ந்து  வந்த  நெருப்பால்  அதனை  ஏற்றி ,  அது வளர்வதற்கு  நெய்யை  ஊற்றுகிறபொழுதும்  மூலமந்திரம்  சொல்லி  ஊற்றினார்கள்.


Related image

         சம்மணமிட்டு  உட்கார்ந்து  கண்மூடி  உள்ளுக்குள்  மந்திர  ஜபம்  சொல்வதைவிட  இந்தமுறை  இன்னும்   சுகமாக  இருந்தது .........மிகவிரைவாக , மிகஎளிதில்  மனம்  குவிந்தது.
மந்திர  ஜபம்  இன்னும்  ஆழ்ந்து  சொல்ல  முடிந்தது.

         அக்னியை  சாட்சியாக  வைத்து,  அக்னிக்கு  எதிரே  செய்கின்றபொழுது  இன்னும்   அதில் ஈடுபாடு  அதிகமாயிற்று.

        முழு கவனமும்   அக்னியின்மீதும் ,  மந்திரத்தின்  மீதும்   நிலைத்து நின்றன.  அதை  மிகுந்த  அன்போடு , மிகுந்த  பக்தியோடு  இந்த  நிவேதனப்  பொருளெல்லாம்  இறைவனுக்கு  சென்று  அடையட்டும்   என்று   உண்மையோடு  ஜெபிக்கின்றபொழுது .............நிவேதனம்  செய்கின்றபொழுது   மனதில்  மிகப்பெரிய  நிறைவு  ஒன்று  ஏற்படுகிறது. மிகப்பெரிய  அக்னி  வளர்த்து,  எல்லா  திக்குகளிலும்  உட்கார்ந்து  இந்த  மந்திர  ஜெபத்தைக்  கற்றுத்தேர்ந்தவர்கள்   நெய்  எடுத்து  அக்னிமீது  ஊற்றி  ஒரே குரலில்  அந்த  மூல  மந்திரத்தை  ஜபிக்க , ஜபிக்க   அந்த  இடத்தின்  அதிர்வுகள்  மாறுகின்றது.

            அந்த   இடம்   நல்ல அதிர்வுகள்  கொண்ட  இடமாக  வளரும். அந்த  இடத்திற்கும்   மேலே  உள்ள பிரபஞ்ச  சக்திக்கும்  மிக  எளிதில்  தொடர்பு  ஏற்படுகின்றது. இதனால்  அங்கு  மழை  பொழியும்.  காற்று தூய்மையாக  மாறி  வீசும். துஷ்டத்தனமான  சூட்சுமங்கள்  அவ்விடம்  விட்டு  விலகி  ஓடிவிடும். நல்லவர்கள்  அங்கு  விரைவில்  ஒன்று  சேர்வார்கள். நல்ல  நம்பிக்கை  பரவும். அங்கு  அமைதி  நிரம்பும். இதனாலேயே  இன்னும்  சிறப்பாக  ஹோமங்களை  இன்னும்  பலமுடன்  அங்கு  செய்வார்கள்.

             இதனாலேயே  அக்காலங்களில்  ரிஷிகளும், மன்னர்களும்   ஒன்று  சேர்ந்து  மிகப்பெரிய  அளவில்  இந்த  யாகங்களை  செய்தார்கள்; பலன்  பெற்றார்கள்.  தனியே  உட்கார்ந்து  திரும்பத்  திரும்ப   மந்திர  ஜபம்  நெடுநாள்  செய்தவருக்கு  ஹோமம்  மிகப்பெரும்   சந்தோஷத்தை ,  சந்துஷ்டியைத்  தரும்.  அதில்   இன்னும்  உண்மையோடு  இருக்க ,  அதனாலேயே  ஆனந்தம்  பெருகப்பெருக ..........இன்னும்  உண்மையாக  ஹோமங்கள்  செய்வார்கள்.   

             என்ன நடக்கும் ?   உள்ளே  நிகழும்  இது  ஒரு  விஷயத்தின்  ஆரம்ப  நிலைகள். மந்திர  ஜபம்   சொல்லிச்சொல்லி  நெருப்பினில்  நெய்யூற்றி   அதை  ஹோமமாக  செய்கின்றபொழுது ...........மனம்  ஸ்தம்பிக்கின்றது. மிகச்சரியாக  ஹோமம்  செய்கின்றவர்கள்,  கிட்டத்தட்ட  அக்னியின்  ரூபத்தையே  ஒத்திருப்பார்கள். சிவந்த  கண்கள், செஞ்சடை ,  மார்பு  ரோமங்கள்  அக்னியால்  பொசுக்கப்பட்டும்,  பளபளப்பான  மேனியும் ,  மெல்லிய  உடலும்  கொண்டுஇருப்பார்கள்.




               அவர்கள்   மிகுந்த  அமைதியோடு  இருப்பார்கள். சீறும்போது   கடுமையாக  சீறுவார்கள்.  மிக  வேகமாக  இயங்குவார்கள். அக்னியால்  ஏற்பட்ட   மொத்த  வலிமையையும்  வெளிப்படுத்துவார்கள்.

          வாக்கு  பலிதம்  கொண்டவர்கள், புத்தி  சாதூர்யம்  கொண்டவர்கள். வருங்காலம்  உணர்பவர்கள். உலகத்தின்  ஒவ்வொரு  அசைவையும்  உற்றுக்  கவனிக்கிற  யுக்தி  உடையவர்கள். இது  எப்படி  இவர்களுக்கு  ஏற்பட்டது ? 

                 மனம்  ஸ்தம்பிதலால் !..........மனம்  நிற்றலால் !

              ஹோமம்  செய்கின்றபொழுது  முழு  ஈடுபாட்டுடன்,  நம்பிக்கையுடன் ,  பக்தியுடன் .......மிகுந்த  உண்மையாக  மந்திர  ஜெபத்துடன்  அக்னியில்  நெய்யினை  ஊற்றுகின்றபொழுது   அவர்களின்  மனம்  வெகு  எளிதில்  ஸ்தம்பித்துப்  போகின்றது.

Related image

         தனியே  அமர்ந்து  மந்திர  ஜபம்  செய்து  செய்து  உருவேற்றி  மந்திர  ஜெபத்தோடு  நெருங்கிய   பழக்கமுள்ளவர்கள்  ஹோமம்  செய்கின்றபொழுது,  அந்த  ஹோமம்  மிகச்  சிறப்பை  அடைகிறது.  அப்படி  மிகச்சிலரே  இருக்கிறார்கள்  என்பதும்  ஒரு  உண்மை!

         செயலில்  ஒரு  ஒழுங்கும்,  நியதியும்  வந்தபொழுது  மட்டுமே  இது  கைகூடும்.  எடுத்தேன் ,  கவிழ்த்தேன்  என்பவர்களால்  ஒருபோதும்  இதனை  கைக்கொள்ளமுடியாது. மனமும்  லயிக்காது. அவர்களால்  ஹோமங்கள்  சிறப்படையாது.



       இடத்தை  சுத்தம்  செய்து, வருகிறவர்களை   தேர்ந்தெடுத்து,  ஹோம  குண்டங்களை  மந்திரங்கள்  சொல்லி  புத்துயிர்  ஊட்டி,  அவைகளைப்  புனிதப்படுத்தியபின்பு  விடியலில்  எந்த  பரபரப்புமின்றி  வெகு  நிதானமாக  சகல  திரவியங்களும்   அருகே  இருக்க,  அந்த  திரவியங்களைக்  கொண்டுவா   என்றுகூட  சொல்வதற்கு  முயற்சிக்காமல்   அவை  அனைத்தும்  அருகே  இருக்கும்படியாக  வைத்துக்கொண்டு,   வேறு பேச்சுக்கள்  
இல்லாமல் ,  வேடிக்கையான  சிந்தனைகள்  இல்லாமல்  முழு  மனதாய்ச்  செய்கின்றபொழுது  மந்திர  ஜபம்  இன்னும்  பலநூறு  மடங்கு  பலமடைகிறது.

   
         தனியே  அமர்ந்து  செய்வதைக்காட்டிலும்  இன்னும்  மந்த்ர ஜபம்  உள்ளுக்குள்  அடர்த்தியாக  தங்கிவிடுகிறது.  உடம்பு  முழுதும்  பரவி , புத்தியில்  ஆளுமை  செய்கிறது. மந்திரங்கள்  மனம்  முழுதும்  பரவி  அமர்ந்துக்கொள்கிறது. இதனால்  மனம்  ஸ்தம்பித்துபோகிறது.

           உடம்பும் , புத்தியும் ,  மனமும்    மந்திரத்தால்  ஆட்பட்டிருக்க  அப்படிச்  செய்பவரின்  வாழ்வு முறை   மாறிப்போகிறது.  இப்படிச்  செய்துதான்  ரிஷி  என்ற  பட்டத்தை  நமது  பெரியோர்கள்  பெற்றார்கள்.  அதுவே  வாழ்க்கை  முறையாக  அவர்களுக்கு  அமைந்தது.

Image result for yagam

          ஹோமம்  செய்வதற்கென்றே  தன்  வாழ்க்கையைப்  பக்குவப்படுத்திக்கொண்டார்கள். என்   வேலை ஹோமம்  செய்வது.  வேறு  எதுவுமில்லை  என்று  தீர்மானித்தார்கள்.  இந்த  ஹோமம் ,  இந்த  உபாசனை  என்றால்  இவரை  அழையுங்கள்  என்று  தேர்ந்தெடுத்துக்கொண்டு   அதில்  மிகத்தீவிரமாக  ஈடுபட்டார்கள்.  அப்படி  மிகுந்த  ஈடுபாட்டோடு  ஹோமம்  செய்கின்றபொழுது,  தன்னைத்  தவிர,  தான்  வளர்கின்ற  நெருப்பினைத்  தவிர  வேறு  சில  சக்திகளை  உணர்ந்தார்கள். ஆதி  சக்தியின்  அம்சமாக , அங்கமாக  பல்வேறு  சக்திகளை பூமியில்  அவர்கள்  இயங்குவதை  உணர்ந்தார்கள்.  அவர்களுக்கு  பெயரிட்டார்கள்.  வழிபட்டார்கள்.

             அவர்களை  சக்தியின்  தோழிகள்  என்றார்கள். " தச  மஹா  வித்யா "  என்ற   முறையில்  விளக்கம்  சொன்னார்கள். 

           பக்குவிகள்  பல்வேறு  பெயர்களில்  உள்ளது  ஒரே  விஷயமே  என்று  மந்திர ஜெபங்களால்  உணர்ந்துகொண்டார்கள். அவற்றையெல்லாம்  " ஸ்ரீ  வித்யா "  என்ற நெறிமுறையாக   வகுத்து தொகுத்து ,  அளித்துள்ளார்கள். 


நன்றி : " திரு. பாலகுமாரன் "  அவர்கள் 
               ' சக்தி  வழிபாடு '.

Friday, May 12, 2017

ஜட்ஜ் ராகவன் அவர்களின் ஸ்வய தர்மம் !

ஸஹஸ்ர  காயத்ரி : ஜட்ஜ்  ராகவன்  அவர்களின்  ஸ்வய  தர்மம் !


              
         சமீபத்தில்  காயத்ரி  மந்திர  மஹிமை  பற்றி  வேத தர்ம சாஸ்திர  பரிபாலன  சபா  சார்பில்  ஏற்பாடு  செய்யப்பட்ட  உபன்யாஸம் - சுந்தரராம  தீக்ஷிதரின்  ' காயத்ரி  மந்த்ர ஜப  மஹிமை ' தலைப்பில்  கேட்டது.

              ஒருவர்  மிக  சிரத்தையாக  தினமும்  1008- ஸஹஸ்ர  காயத்ரி  ஜெபம்  செய்தாலே .....அவர்  வாழும்  இடத்தை  சுற்றியுள்ள  சிசுக்களுக்கு  எந்த  அகால  மரணமும்  நிகழாது. சுற்றியுள்ளோருக்கு  மன  சந்தோசம்  இருக்கும்.  அவர்களை  சுற்றியுள்ள  குடும்பங்களில்  சண்டைகள், சச்சரவுகள்  நிகழாது. கடுமையான  மனக்கிலேதங்கள்  இருக்காது.  இன்று  உண்மையில்  அத்தகைய  நல்லோர்கள், சத்தியதன்மை  மிக்க  உயர்ந்தோர்கள்  குறைவு  என்பதே  உண்மை.

                இன்று  எங்களால்  இருக்க  முடியாது  என்று  புலம்புவோர்களுக்கு .............சென்னையை  சேர்ந்த  ஹைகோர்ட்  ஜட்ஜ்  திரு. ராகவன்  வாழ்ந்துகாட்டி அனுஷ்டித்துள்ளார்.

                இவர்  தினமும்  பூஜை  முடித்து  ஸஹஸ்ர  காயத்ரி  ஜெபம்   செய்யாமல்  வீட்டிலிருந்து வெளியே  வரமாட்டாராம். மிகச்  சிறப்புடன்  பேசக்கூடியவர். அவரது  பேச்சைக்கேட்க  பல  வெளிநாட்டினரும்  ஆர்வமுடன்  இருந்துள்ளனர்.

          அப்படி  ஒருமுறை  ஒரு  விஞ்ஞானி  ஒருவர்  ஜட்ஜ் திரு.  ராகவன்  வீட்டிற்கு  காலையிலேயே  வந்து  அவரது  பேச்சினை  ரெக்கார்ட்   செய்ய  விரும்பியபோது ,  அவர்  பூஜை  முடித்து  ஸஹஸ்ர ஜெபம்  செய்ய  உட்கார்ந்து  உள்ளார். முடித்து  வர  2 - மணிநேரம்  ஆகும்  என  வீட்டிலுள்ள  வேலையாட்கள்  கூறியுள்ளனர். அந்த  ஆங்கிலேயர்  தாம்  காத்திருப்பதாக  சொல்லி  காத்திருந்தார். 

            ஸஹஸ்ர  காயத்ரி  ஜெபம்  செய்து  வெளியே  வந்து  உபசரித்த  ஜட்ஜ்  திரு. ராகவனிடம் ......அந்த  ஆங்கிலேயர்  இவ்வளவு  நேரம்  பேட்டியளித்திருந்தால்  உலகுக்கு  எவ்வளவோ  நன்மை  என்றும் ........2 - மணிநேரம்  அவர்  வீண்  செய்துள்ளார்  என்றும்  கூற ...........அதற்கு  ஜட்ஜ்  திரு . ராகவன்  அவர்கள்  பின்வருமாறு  கூறினார். 

           " நண்பரே !  உள்ளே   செய்த  பூஜைகளாலும் , ஸஹஸ்ர  காயத்ரியின்  கருணையாலும்  ஏற்பட்ட   தபஸினால்  தான் ,  எங்கிருந்தோ  வந்து  எனது  வீட்டின் வரவேற்பறையில்  தாங்கள்  2- மணிநேரம்  காத்திருந்து  பேட்டி  எடுக்கிறீர்கள் ! என்னுடைய  பேச்சிற்கு  காரணமே  ஸஹஸ்ர  காயத்ரி  தான் ! " என்று  விளக்கமாக  கூற , அதற்கு  அந்த  ஆங்கிலேயர்  " உங்களின்  இந்த  அறிவாற்றலுக்கு  காரணமான  உங்களின்  மதத்தையும் , பூஜை  மற்றும்  ஸஹஸ்ர  காயத்ரியை  வணங்குகிறேன் ! "  என்று  நெடுஞ்சாண்கடையாக  விழுந்து  வணங்கினார்.

       நம்மில்  பலர்  நேரமில்லை ,  என்றும்  முடியவில்லை  என்றும்  காரணம்  கூறுபவர்கள்  ஜட்ஜ்  திரு. ராகவனின்  ஸ்வய  தர்மத்தை  சற்றே  நினைத்து  பார்த்து  திருத்திக்கொள்வோம்  நண்பர்களே !


நன்றி : வேத  தர்ம சாஸ்திர  பரிபாலன  சபா
திரு . சுந்தரராம  தீக்ஷிதரின்  " காயத்ரி  ஜெப  மஹிமை "

Thursday, May 11, 2017

சாக்தம் மிகச் சத்தியமான வழி !

சாக்தம்  : -



     சாக்த  வழிபாட்டில்  மிகவும்  அதிர்வு  மிக்க  மந்திரங்கள்  உள்ளன. வெகு  நிச்சயம்   இந்த மந்திரங்கள்  சொல்லச் சொல்ல  மிக  உயர்ந்த  நிலையை  அடையமுடியும். நல்லவைகள்  பலவும்  கண்டிப்பாக  நடக்கும்.

          சாக்தம்  கடுமையான  வழி. இது  கத்திமேல்  நடப்பதைப்போன்றது.மிகச்  சத்தியமான  வழி. நெல்முனையளவும்  சத்தியம்  பிறழாமல்  
நடப்பவரால் ,  அளவு  கடந்த  பொறுமையும்,  நம்பிக்கையும்  உடையவர்களால் தான் இந்த  வழியை  பின்பற்ற முடியும். நாம்  ஜெயிக்க முடியும். மந்திர ஜபம்  நமக்கு  ஜெயத்தைக் கொடுக்கும்  என்று  முழு  மனதாய்  அதனிடம்  சரணடைந்தவர்களால்  மட்டுமே  அதனைப்  பின்பற்றமுடியும்.

         சத்தியம்  குறைந்த  இந்த  நாட்களில், பொறுமை  குறைந்த  இந்த  நாளில்  சாக்தத்தை  உபயோகப்படுத்துவோர்  எண்ணிக்கையும்  குறைந்துவிட்டது. இதனை  தவறாக  கையாண்டு  கிழிந்துபோனவர்கள்  பலரைப்  பார்த்து  சாக்தவழியே  தவறென்று  பலரும்  உதறிவிட்டார்கள்.

      சாக்தம்  மிகச் சத்தியமான  வழி. மிகவும்   சரியான  வழி.  சுகங்களை  அள்ளித்தருகின்ற  வழி. நல்ல  சுகங்களை  அனுபவித்து, மிக  நிறைவான , பக்குவப்பட்ட  மனம் .........அழியாத  பிரம்ம  சுகத்தை  மிகக்  கூர்மையாக , மிகத்  தெளிவாக  நாடும்.  அதற்குரிய  தகுதியை  படிப்படியாக  அளித்து ..........முடிவில்  ப்ரம்ம  வித்யா  என்று  அழைக்கப்படும்  " ஸ்ரீ  வித்யா " வில் மூழ்கி  கரைந்து, மனம்  அழிந்து விடும்.

         நம்முடைய   யோகிக்கிதையை   நல்ல  குரு  ஒருவர்   வெகு  எளிதில்  கண்டுவிடுவார். உங்களின்  உண்மையான  நோக்கம்  என்ன  என்பதை  அறிந்து ..........அதற்கு  தேவையான  மந்திர ஜபம்  எடுத்து தருவார். " பாத்திரம்  அறிந்து  பிச்சை "  என்பதற்கு  ஏற்ப  செல்வம் , வசீகரிக்கும்  ஆற்றல் ,  காரியங்களை  தடையில்லாமல்  நடத்தல்,  எதிரிகளை  அடக்க ,  தும்சம் செய்ய ,  நல்ல  விசயங்களை  ஆகர்ஷிக்க , கலைகள்  பலவும்  வசப்பட ,  நல்லவைகள்  பலவற்றை   அடைந்திட ........பிரம்மமாக   என   எல்லாவற்றையும்,  எல்லோருக்கும்  குரு  கொடுப்பதில்லை.  நம்முடைய  யோக்கிதைத்தான்  நிர்ணயிக்கிறது.


        எனவே   தகுதியற்ற  ஒருவருக்கு  மந்திர  உபதேசம்  செய்கிறபோது ..........இதற்கு  எதிரான  பலன்களே  ஏற்படுகின்றன. உபாஸிப்பவரின்  தகுதியற்ற  நிலையால் ,  சாக்த  வழிபாடே  குறைவுள்ளதாக  பேசப்படுகிறது.

மந்திர  ஜபம்  கற்றுக்கொள்பவர்கள்   நாடி சுத்தி  செய்து ,  பின்னர்  பிராணாயாமம்  செய்தல்  மிகவும்  நல்லது. நுரையீரல்கள்  சுத்தப்படுத்தி,  மூச்சு விடுதலை   சீராக்கி .......அதன்மூலம்  மன  அமைதி  ஏற்படுத்தி .......  ஏகாக்கிரஹம்  என்ற  மன  ஒருமையை   வளர்த்துக்கொண்டு ,  அமைதியாய்    ஒரு இடத்தில்  உட்கார்ந்து   பழகுதல்  ஏற்பட்டு,  இதற்கு  இடையூறு  இல்லாத  உணவுப்  பழக்கம்  கைக்கொண்டு,  வயிறு  முழுதும்  நிரம்பாத .....பாதி  வயிறு  காலியாக   சிறிது நீர்  குடித்து  தொண்டையை  ஈரமாக்கி ..........மெல்ல  கிழக்கு  நோக்கி  அமர்ந்து  மந்திரத்தை  சொல்லக்  சொல்ல   அதன்  சூட்சுமம்  வெகுநிச்சயமாய்  புரிபட்டுவிடும்.

          மந்திரஜெபம்   என்பது  எளிதானது. சுகமானது.  சோர்வில்லாமல்  வெகுநேரம்  செய்யக்கூடிய  பலமுள்ளது.  தெய்விகத்தன்மையை   தரக்கூடியது.  மந்திரஜெபம்  அறிவாற்றலை  பிரகாசிக்க கூடியது.  ஆழ்ந்த  நிம்மதியை  தரக்கூடியது.  ஆரம்பத்தில்  பல்வேறு  சலனங்களுக்கு   ஆட்பட்டாலும் ......மிகுந்த  அக்கறையோடு, ஈடுபாட்டோடு    மந்திரஜெபம்   செய்யச்செய்ய ..........  ஒரு  மாத காலத்திலேயே   அதன்  சுகத்தை  அனுபவித்து   அது  உங்களோடு   பகிர்ந்துகொள்ளும்.  பின்பு  மந்திரஜெபம்  செய்யாமல்  இருக்கமுடியாது   என்ற  நிலை  ஏற்படும். இன்னும் ....இன்னும்  என்று  நேரம்  அதிகரிக்கின்ற   ஆவேசம்  கூடிவிடும்.

       இவருக்கு   உடம்பு  சரியில்லையா,  சரி ,  நான்   இவர்  படுத்துகிடக்கின்ற  அறை  வாசலில்  அமர்ந்து   ஜபம்  செய்கிறேன்.  மனம்  ஒருமித்து   ஜெபம்   செய்து  அவர்  உடம்பு  நலமாகட்டும்  என்று  வேண்டிக்கொள்ள..........மந்திரத்தை  சொல்லக்  சொல்ல   வெகு  நிச்சயமாய் சம்பந்தப்பட்டவருக்கு  மாறுதல்  தெரியும்.



       மந்திரஜெபம்   தான்  என்  வாழ்க்கையின்  அடிநாதம்,  அஸ்திவாரம்.  புகழையும் , பொருளையும்  கொடுத்துள்ளது. மந்திரஜெபம்  தான்   வாழ்க்கையில்   பல  தெளிவுகளை  தந்திருக்கிறது.

            சாக்தத்தை  கடைபிடிக்க   அடிப்படையான  விஷயம்   சத்தியம். நெல்முனையளவும்  பிறருக்கு  தீங்கு  நினைக்காத  நிதானம் ,   கர்வமே  வராத  பணிவு ......எல்லா  உயிர்களின்  மீதும்  கருணை.
இதனைக்  கைகொண்டோருக்கு   சாக்த  வழி   மிக  எளிது.  மந்திர ஜெபம்   செய்யச்  செய்ய  முகத்தில்  தோன்றும்  மலர்ச்சியை  அனுபவித்துத்தான்   பார்க்க  வேண்டும். வைராக்கியம்  வளர்வதில்  ஈடுபட்டுதான்  தெரிந்துகொள்ளவேண்டும்.

         சாத்வீகமானவர்களுக்கு  சாக்தம்   உடைவாள்.
அல்லாதவர்களுக்கு   முள்பந்து. சக்தி  மிகுந்தோரை  எப்போதும்  தொட  சாக்தம்  காத்திருக்கிறது. ஒருமுகப்பட்ட  மன  அமைதி  அடக்கி  வைக்கப்பட்ட  குதிரை சக்தி......நெல்முனையளவும்   வஞ்சனையில்லாத  இறைபக்தியே   சாக்தத்தின்  ஜீவநாடி.

       நெல்முனையளவும்  சத்தியம்  பிறழாத , பிறருக்கு  தீங்கு  நினைக்காத  மனம்  உடையவர்களால்  மட்டுமே  வெகு  நிச்சயம்   உன்னத நிலையை  அடையமுடியும். இல்லையெனில்  நல்ல  குரு  கிடைத்தும் , பூர்வ  புண்ணியத்தால்   அதற்குரிய  சூழ்நிலை  அமைந்தும்  அவர்களால்  மந்திரஜெபத்தை  மிக  ஈடுபாட்டோடு  கைக்கொள்ள  முடியாது.  வேலை , சேவை ....வெட்டிபேச்சுக்கள்  என்று  வாழ்க்கை  கழிந்துகொண்டு  இருக்கும். ( சேவை  உண்மையாக  செய்திருந்தால்  விரைவில்  சித்த சுத்தி  ஏற்பட்டு ...........தானாகவே  அடுத்து , அடுத்து  என  முன்னேறியிருப்போம் )

    "  கருத்தனுக்கு  ஆக்கும்  நிஷ்காமிய  கர்மம்                  கருத்தை   திருத்தியது  உந்தீபற -
       கதிவழி   காண்பிக்கும்  உந்தீபற. "

                                                           - உபதேச  சாரம் 
                                           ( பகவான்  ஸ்ரீ  ரமணமகரிஷி )

              சாக்த   வழிபாடு  செய்பவர்கள்  ( ஸ்ரீ  வித்யா உபாஸனை )  சாதாரணமானவர்கள்  அல்ல. தன்  உணர்வுகளை  உற்று  கவனிப்பதில்  கைதேர்ந்தவர்கள். மிகுந்த  உண்மையானவர்கள். சத்தியதோடு  இடையறாது  தொடர்பு  உடையவர்கள். இந்த  வாழ்வின்  அடிநாதம்  எது  என்பதை  தெள்ளத்  தெளிவாக  உணராமல்  ஓயமாட்டேன்  என்ற  சபதத்தை  சங்கல்பமாக  உடையவர்கள்.

        சத்திய  சந்தர்களால்தான்  இந்த  சாக்தத்தை, 
(ஸ்ரீ  வித்யை - பிரம்ம  வித்யை ) கடைபிடிக்க  முடியும்.  

          சாக்தத்தை  பற்றி  இங்கு  முழுமையாக  சொல்லவில்லை.  சொல்லப்போவதும்  இல்லை. ஒரு  அறிமுகம்  மட்டுமே!  

நன்றி :  திரு. பாலகுமாரன்  அவர்கள்
                ' சக்தி  வழிபாடு '