Thursday, May 11, 2017

சாக்தம் மிகச் சத்தியமான வழி !

சாக்தம்  : -



     சாக்த  வழிபாட்டில்  மிகவும்  அதிர்வு  மிக்க  மந்திரங்கள்  உள்ளன. வெகு  நிச்சயம்   இந்த மந்திரங்கள்  சொல்லச் சொல்ல  மிக  உயர்ந்த  நிலையை  அடையமுடியும். நல்லவைகள்  பலவும்  கண்டிப்பாக  நடக்கும்.

          சாக்தம்  கடுமையான  வழி. இது  கத்திமேல்  நடப்பதைப்போன்றது.மிகச்  சத்தியமான  வழி. நெல்முனையளவும்  சத்தியம்  பிறழாமல்  
நடப்பவரால் ,  அளவு  கடந்த  பொறுமையும்,  நம்பிக்கையும்  உடையவர்களால் தான் இந்த  வழியை  பின்பற்ற முடியும். நாம்  ஜெயிக்க முடியும். மந்திர ஜபம்  நமக்கு  ஜெயத்தைக் கொடுக்கும்  என்று  முழு  மனதாய்  அதனிடம்  சரணடைந்தவர்களால்  மட்டுமே  அதனைப்  பின்பற்றமுடியும்.

         சத்தியம்  குறைந்த  இந்த  நாட்களில், பொறுமை  குறைந்த  இந்த  நாளில்  சாக்தத்தை  உபயோகப்படுத்துவோர்  எண்ணிக்கையும்  குறைந்துவிட்டது. இதனை  தவறாக  கையாண்டு  கிழிந்துபோனவர்கள்  பலரைப்  பார்த்து  சாக்தவழியே  தவறென்று  பலரும்  உதறிவிட்டார்கள்.

      சாக்தம்  மிகச் சத்தியமான  வழி. மிகவும்   சரியான  வழி.  சுகங்களை  அள்ளித்தருகின்ற  வழி. நல்ல  சுகங்களை  அனுபவித்து, மிக  நிறைவான , பக்குவப்பட்ட  மனம் .........அழியாத  பிரம்ம  சுகத்தை  மிகக்  கூர்மையாக , மிகத்  தெளிவாக  நாடும்.  அதற்குரிய  தகுதியை  படிப்படியாக  அளித்து ..........முடிவில்  ப்ரம்ம  வித்யா  என்று  அழைக்கப்படும்  " ஸ்ரீ  வித்யா " வில் மூழ்கி  கரைந்து, மனம்  அழிந்து விடும்.

         நம்முடைய   யோகிக்கிதையை   நல்ல  குரு  ஒருவர்   வெகு  எளிதில்  கண்டுவிடுவார். உங்களின்  உண்மையான  நோக்கம்  என்ன  என்பதை  அறிந்து ..........அதற்கு  தேவையான  மந்திர ஜபம்  எடுத்து தருவார். " பாத்திரம்  அறிந்து  பிச்சை "  என்பதற்கு  ஏற்ப  செல்வம் , வசீகரிக்கும்  ஆற்றல் ,  காரியங்களை  தடையில்லாமல்  நடத்தல்,  எதிரிகளை  அடக்க ,  தும்சம் செய்ய ,  நல்ல  விசயங்களை  ஆகர்ஷிக்க , கலைகள்  பலவும்  வசப்பட ,  நல்லவைகள்  பலவற்றை   அடைந்திட ........பிரம்மமாக   என   எல்லாவற்றையும்,  எல்லோருக்கும்  குரு  கொடுப்பதில்லை.  நம்முடைய  யோக்கிதைத்தான்  நிர்ணயிக்கிறது.


        எனவே   தகுதியற்ற  ஒருவருக்கு  மந்திர  உபதேசம்  செய்கிறபோது ..........இதற்கு  எதிரான  பலன்களே  ஏற்படுகின்றன. உபாஸிப்பவரின்  தகுதியற்ற  நிலையால் ,  சாக்த  வழிபாடே  குறைவுள்ளதாக  பேசப்படுகிறது.

மந்திர  ஜபம்  கற்றுக்கொள்பவர்கள்   நாடி சுத்தி  செய்து ,  பின்னர்  பிராணாயாமம்  செய்தல்  மிகவும்  நல்லது. நுரையீரல்கள்  சுத்தப்படுத்தி,  மூச்சு விடுதலை   சீராக்கி .......அதன்மூலம்  மன  அமைதி  ஏற்படுத்தி .......  ஏகாக்கிரஹம்  என்ற  மன  ஒருமையை   வளர்த்துக்கொண்டு ,  அமைதியாய்    ஒரு இடத்தில்  உட்கார்ந்து   பழகுதல்  ஏற்பட்டு,  இதற்கு  இடையூறு  இல்லாத  உணவுப்  பழக்கம்  கைக்கொண்டு,  வயிறு  முழுதும்  நிரம்பாத .....பாதி  வயிறு  காலியாக   சிறிது நீர்  குடித்து  தொண்டையை  ஈரமாக்கி ..........மெல்ல  கிழக்கு  நோக்கி  அமர்ந்து  மந்திரத்தை  சொல்லக்  சொல்ல   அதன்  சூட்சுமம்  வெகுநிச்சயமாய்  புரிபட்டுவிடும்.

          மந்திரஜெபம்   என்பது  எளிதானது. சுகமானது.  சோர்வில்லாமல்  வெகுநேரம்  செய்யக்கூடிய  பலமுள்ளது.  தெய்விகத்தன்மையை   தரக்கூடியது.  மந்திரஜெபம்  அறிவாற்றலை  பிரகாசிக்க கூடியது.  ஆழ்ந்த  நிம்மதியை  தரக்கூடியது.  ஆரம்பத்தில்  பல்வேறு  சலனங்களுக்கு   ஆட்பட்டாலும் ......மிகுந்த  அக்கறையோடு, ஈடுபாட்டோடு    மந்திரஜெபம்   செய்யச்செய்ய ..........  ஒரு  மாத காலத்திலேயே   அதன்  சுகத்தை  அனுபவித்து   அது  உங்களோடு   பகிர்ந்துகொள்ளும்.  பின்பு  மந்திரஜெபம்  செய்யாமல்  இருக்கமுடியாது   என்ற  நிலை  ஏற்படும். இன்னும் ....இன்னும்  என்று  நேரம்  அதிகரிக்கின்ற   ஆவேசம்  கூடிவிடும்.

       இவருக்கு   உடம்பு  சரியில்லையா,  சரி ,  நான்   இவர்  படுத்துகிடக்கின்ற  அறை  வாசலில்  அமர்ந்து   ஜபம்  செய்கிறேன்.  மனம்  ஒருமித்து   ஜெபம்   செய்து  அவர்  உடம்பு  நலமாகட்டும்  என்று  வேண்டிக்கொள்ள..........மந்திரத்தை  சொல்லக்  சொல்ல   வெகு  நிச்சயமாய் சம்பந்தப்பட்டவருக்கு  மாறுதல்  தெரியும்.



       மந்திரஜெபம்   தான்  என்  வாழ்க்கையின்  அடிநாதம்,  அஸ்திவாரம்.  புகழையும் , பொருளையும்  கொடுத்துள்ளது. மந்திரஜெபம்  தான்   வாழ்க்கையில்   பல  தெளிவுகளை  தந்திருக்கிறது.

            சாக்தத்தை  கடைபிடிக்க   அடிப்படையான  விஷயம்   சத்தியம். நெல்முனையளவும்  பிறருக்கு  தீங்கு  நினைக்காத  நிதானம் ,   கர்வமே  வராத  பணிவு ......எல்லா  உயிர்களின்  மீதும்  கருணை.
இதனைக்  கைகொண்டோருக்கு   சாக்த  வழி   மிக  எளிது.  மந்திர ஜெபம்   செய்யச்  செய்ய  முகத்தில்  தோன்றும்  மலர்ச்சியை  அனுபவித்துத்தான்   பார்க்க  வேண்டும். வைராக்கியம்  வளர்வதில்  ஈடுபட்டுதான்  தெரிந்துகொள்ளவேண்டும்.

         சாத்வீகமானவர்களுக்கு  சாக்தம்   உடைவாள்.
அல்லாதவர்களுக்கு   முள்பந்து. சக்தி  மிகுந்தோரை  எப்போதும்  தொட  சாக்தம்  காத்திருக்கிறது. ஒருமுகப்பட்ட  மன  அமைதி  அடக்கி  வைக்கப்பட்ட  குதிரை சக்தி......நெல்முனையளவும்   வஞ்சனையில்லாத  இறைபக்தியே   சாக்தத்தின்  ஜீவநாடி.

       நெல்முனையளவும்  சத்தியம்  பிறழாத , பிறருக்கு  தீங்கு  நினைக்காத  மனம்  உடையவர்களால்  மட்டுமே  வெகு  நிச்சயம்   உன்னத நிலையை  அடையமுடியும். இல்லையெனில்  நல்ல  குரு  கிடைத்தும் , பூர்வ  புண்ணியத்தால்   அதற்குரிய  சூழ்நிலை  அமைந்தும்  அவர்களால்  மந்திரஜெபத்தை  மிக  ஈடுபாட்டோடு  கைக்கொள்ள  முடியாது.  வேலை , சேவை ....வெட்டிபேச்சுக்கள்  என்று  வாழ்க்கை  கழிந்துகொண்டு  இருக்கும். ( சேவை  உண்மையாக  செய்திருந்தால்  விரைவில்  சித்த சுத்தி  ஏற்பட்டு ...........தானாகவே  அடுத்து , அடுத்து  என  முன்னேறியிருப்போம் )

    "  கருத்தனுக்கு  ஆக்கும்  நிஷ்காமிய  கர்மம்                  கருத்தை   திருத்தியது  உந்தீபற -
       கதிவழி   காண்பிக்கும்  உந்தீபற. "

                                                           - உபதேச  சாரம் 
                                           ( பகவான்  ஸ்ரீ  ரமணமகரிஷி )

              சாக்த   வழிபாடு  செய்பவர்கள்  ( ஸ்ரீ  வித்யா உபாஸனை )  சாதாரணமானவர்கள்  அல்ல. தன்  உணர்வுகளை  உற்று  கவனிப்பதில்  கைதேர்ந்தவர்கள். மிகுந்த  உண்மையானவர்கள். சத்தியதோடு  இடையறாது  தொடர்பு  உடையவர்கள். இந்த  வாழ்வின்  அடிநாதம்  எது  என்பதை  தெள்ளத்  தெளிவாக  உணராமல்  ஓயமாட்டேன்  என்ற  சபதத்தை  சங்கல்பமாக  உடையவர்கள்.

        சத்திய  சந்தர்களால்தான்  இந்த  சாக்தத்தை, 
(ஸ்ரீ  வித்யை - பிரம்ம  வித்யை ) கடைபிடிக்க  முடியும்.  

          சாக்தத்தை  பற்றி  இங்கு  முழுமையாக  சொல்லவில்லை.  சொல்லப்போவதும்  இல்லை. ஒரு  அறிமுகம்  மட்டுமே!  

நன்றி :  திரு. பாலகுமாரன்  அவர்கள்
                ' சக்தி  வழிபாடு ' 

        

No comments:

Post a Comment