Friday, April 18, 2014

மஹா பெரியவா  அருளுரை :-






செய்ய வேண்டிய பணி:-

   தங்கள் க்ராமத்தில் அல்லது பேட்டையில் ஒருத்தன் சாகிற நிலையில் இருக்கிறான் என்று தெரிந்தால் அங்கே ஸங்கத்திலிருந்து ஒருத்தரோ சிலரோ போக வேண்டும். வீட்டிலே இல்லாமல் ஆஸ்பத்திரியிலோ ஜெயிலிலோ உயிரை விடுகிறவர்ளும் உண்டு. எனவே இப்பேர்ப்பட்ட இடங்ளுக்கும் தங்களை அனுமதிக்கும் படியாக அந்தந்த அதிகாரிகளிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே வெறும் கையோடு போகக்கூடாது. நாமம்தான் ஸர்வரோக நிவாரணி என்பது வாஸ்தவமே. அதற்கு வெளி வஸ்து ஒன்றும் வேண்டியதில்லைதான். ஆனால் ஸ்தூலமாக ப்ரஸாதம் என்று ஒன்றைக்கொண்டுபோய்க் கொடுத்தால் அதற்கும் ஒரு தனி உத்ஸாஹ சக்தி உண்டுதான்;அது சாகிற ஜீவனுக்கு ஜாஸ்தி ஆறுதலாக இருக்கும். ஆனதால், முதலிலேயே கையில் சிவன்கோவில் விபூதி, பெருமாள் கோயில் துளசி 'ஸ்டாக்'வைத்திருக்கவேண்டும். அம்பாள் கோயில் குங்குமம், முருகன் அல்லது பிள்ளையார் கோயில் விபூதி என்று எது இருந்தாலும் ஸரி. சிவபரமாகவும், விஷ்ணுபரமாகவும், ஏதாவது இரண்டு கோயில் ப்ரஸாதம் ஸ்டாக் இருக்கவேண்டும். கங்கா ஜலம் ஸர்வ பாப சமனம் ஆனதால் சங்கா தீர்த்தமும் வைத்திருக்க வேண்டும். மரணமடைகிற ஜீவன் சைவ மதமோ, வைஷ்ணவ மதமோ அதைப்பொறுத்து அந்தந்த ப்ரஸாதத்தை எடுத்துப்போக வேண்டும். கங்கா தீர்த்தம் எல்லோருக்கும் பொது. அநேக சைவர்கள் துளஸி ப்ரஸாதத்தையும் ஆக்பிக்ஷேக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் வைஷ்ணவர்கள்கூட, ஈஸ்வரன் கோயில் ப்ரஸாதம் என்றால் விபூதி ப்ரஸாதம் கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார்கள். ஆனால் நாம் அவரவர் அபிப்ராயத்துக்கு அநுகூலமாகத்தான் ப்ரஸாதத்தைத் தரவேண்டும். மரண ஸமயத்திலே ஓர் இடத்தில் போய் ஸித்தாந்தச் சண்டைகளைக் கிளப்பக் கூடாது. யாருக்கு எது ஹிதமாக இருக்குமோ, அப்படிப்பட்ட ப்ரஸாதமாக எடுத்துப்போக வேண்டும்.


    விபூதிப்ரஸாதம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கோ, அல்லது தனிக் கோயிலில் இருக்கிற பிள்ளையாருக்கோ, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கோ அபிஷேகம் பண்ணப்பட்ட விபூதியாக இருக்க வேண்டும். ஸாக்ஷ£த் பராசக்தியான அம்பாள் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமும் கங்கா ஜலத்துடனோ, கங்கா ஜலம் கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாகவோ வைத்திருந்து, மரிக்கிறவனுக்குக் கொடுக்கலாம். இதேபோல் விஷ்ணுபரமாக, பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளஸியைக்கொண்டு வந்து உலர்த்தி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். பெருமாள் பாதத்தில் அபிஷேகமான தீர்த்தமும் கொடுக்கலாம். கங்கை கிடைக்காவிட்டால், அதற்கு பதில் வைஷ்ணவர்களுக்குப் பெருமாள் பாத தீர்த்தம் தரவேண்டும். பெருமாளுக்கு நித்யப்படி முழு அபிஷேகம் இராது. திருமஞ்சனம் என்று சில நாட்களில்தான் செய்வார்கள். அதனால் மூர்த்தியின் பாதத்தில் மட்டும் அபிஷேகம் பண்ணுவித்து அந்தத் தீர்த்தத்தை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். எதற்கும் கங்கை கைவசம் இருப்பது நல்லது.

       சாவு என்றால் எவனுக்கும் பயம்தான். ஆயுஸ் முழுக்க நாஸ்திகனாக இருந்தவன்கூட அந்திம காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்தியின்கையில் தானிருக்கிறோம் என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமலிருக்கமாட்டான். அந்த நேரத்திலே பயத்தைப்போக்க அந்த சக்திதான் கதி என்ற எண்ணம் எவனுக்கும் வராமல் இருக்காது. எவனுமே ஈஸ்வர த்யானத்தோடுதான் சாக விரும்புவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனதால், நாம் அவனுக்கு உபகரிப்பதை அவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வான். அவனுடைய பந்துக்களும் இந்தக் கைங்கர்யத்தை வரவேற்பார்கள். சில கிழம் கட்டைகள் போகாதா என்று இருக்கும்போது, வைத்யம் பார்க்கிறோம் என்று நாம் போனால் ஒருக்கால் பந்துக்கள் அசட்டை பண்ணக்கூடும் ஆனால் 'புறப்பாடு'நன்றாக நடப்பதற்கே நாம் உபகாரம் பண்ணுகிறோம் என்றால் எவரும் ஆக்ஷேபிக்கமாட்டார்கள்!அதிலும் நாம் அவர்களுக்குச் எந்தச் செலவும் சிரமமும் வைக்காததால் நிச்சயம் ஆக்ஷேபிக்கமாட்டார்கள் ஆனதால் நாம் இப்படிப்பட்ட தொண்டு செய்கிறோம் என்று தெரிந்துவிட்டால், அவர்களே நம்மைக் கூப்பிடுவார்கள். கூப்பிடாவிட்டாலும் நாம் போகவேண்டும். அவர்கள் கடும் நாஸ்திகர்களாக இருந்து ஆக்ஷேபித்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். அப்படியும் கேட்காவிட்டால் திரும்பிவிடலாம். ஆனால் அப்போதுகூடக் கோபம் இல்லாமல் சாகிற ஜீவனுக்கான ப்ராத்தனையை நமக்குள் செய்துகொள்ள வேண்டும். மொத்தத்தில் மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்யப் பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் அது தொண்டே இல்லை.


உயிர்பிரிகிறவனுக்கு உயர் உதவி


    இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது;அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம்!

   இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது-அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால் அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா சுரீல் என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

      நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்;அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ''ஹர ஹர மஹாதேவா'', ''ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே''என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலைபாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால் அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான ( effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ ? உயிர்கொண்டு போம் பொழுது ?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக் (கு) உற்றார் ஆர்உளரோ ?






                        என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். அந்த ஸமயத்திலேயே ப்ராணன் ஒடுங்கிவிட்டால் அவனை பரமாத்மா எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். கீதையில் அவர் அப்படி வாக்குக்கொடுத்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் நினைக்கிறானா, நினைக்கவில்லையா என்பதைப் பாராட்டாமல் irrespective -ஆக ''கடைசியில் எதெதை நினைத்தாலும் அத்தை அடைகிறான்''என்று அவர் சொல்லி விட்டதால், இந்த ஜீவன் எப்படி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், கடைசியில் அவரை நினைத்துவிட்டதற்காக அதை அவர் எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். கடைசி நேரத்தில் அடியோடு நிராதரவான ஒரு ஜீவனுக்கு உண்டாகிற தாபத்தோடு, சுற்றியிருக்கிற நமக்கும் அது கடைத்தேற வேண்டுமே என்பதில் ஹ்ருதய பூர்வமான கவலை இருந்து பகவானை ப்ரார்த்தித்துக்கொண்டு நாமாவைச் சொன்னால் அதற்குப் பலன் இராமல் போகாது.

        எல்லா பரோபகாரங்களையும்விட உத்தமமானது ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிறதுதான். ஆகையால் நாம் செய்கிற நாம உச்சாரணத்தால் அந்திமத்தில் ஒரு ஜீவன் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக்கொள்ளச் செய்துவிட்டால் அதைப்போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

   கடைசிகால ஈஸ்வர ஸ்மரணை ஜன்மாவை அப்படியே அழித்துவிடாவிட்டால்கூடப் பாவாயில்லை. நிச்சயம் அது பாபத்தைப் பெரிய அளவுக்கு அலம்பி விட்டுவிடும். இதைப்பற்றி ஸந்தேஹமில்லை. பகவந்நாமா மனஸுக்கு உள்ளே ஊறிவிடுகிறபோது பாபத்தை நிச்சயம் கழுவிவிடும். ஆனதால், பகவந்நாமாவோடு கண்ணை மூடுகிறவன் ஜன்மாவே இல்லாமல் விடுபட்டு விடுகிறான் என்று வைத்துக்கொள்ளாவிட்டாலும், மறுபடியும் பாபஜன்மா எடுக்கவே மாட்டான்;நல்ல புண்ய ஜன்மாவாக எடுப்பான் என்பது நிச்சயம்.

         புண்ய ஜன்மா என்றால் பணம், காசு, அழகு, உசந்த ஜாதி, இதுகளா?இல்லை இந்த ஜன்மா முடிவிலே வந்த பகவத் ஸ்மரணை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அடுத்த ஜன்மாவிலும் எப்போது பார்த்தாலும் இருக்கும்படியான சூழ்நிலையும் மனநிலையும் கொண்டதுதான் புண்யஜன்மா. அப்படி எடுத்து அடுத்த ஜன்மத்தோடாவது சொந்த முயற்சியினாலேயே ஸம்ஸார நிவர்த்தியை ஸம்பாத்தித்துக்கொள்ள ஒரு ஜீவனுக்கு இந்த ஜன்மத்திலேயே அந்திம நேரத்தில் நாம் நம்மாலான ஸஹாயத்தைப் பண்ண வேண்டும்.

   இந்த மஹா பெரிய தர்மத்தை, ஈடில்லாத உபகாரத்தை, முதலில் சொன்னேனே, வாவழிபாடு, ஜீவாத்ம கைங்கர்யம், மற்ற பரோபகாரங்களுக்காக ஸங்கமாகச் சேரவேண்டும் என்று, இந்த ஸங்கத்துக்காரர்கள் தவறாமல் செய்ய வேண்டும். 


    செய்யவேண்டியது என்னவென்றால், ப்ராணா வஸ்தையில் இருக்கிறவர்களிடம் கோயில் ப்ரஸாதத்துடன் போகவேண்டும். அவர்களுக்கு கங்கா தீர்த்தம் கொடுக்க வேண்டும். விபூதி இடவேண்டும். துளஸியை வாயில் போடவேண்டும். அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு 'சிவ சிவ சிவ சிவ'என்றோ 'ராம ராம ராம ராம'என்றோ உரக்கச் சொல்ல வேண்டும். உரக்கச் சொல்லவேண்டியது அவசியம். ஜீவன் காதிலே அதுபட்டு மனஸைத் திருப்ப வேண்டுமாதலால், உயிர்போகும் வரையில் இப்படி நாம ஜபம் செய்வதுதான் ச்ரேஷ்டம். ஆனால் ப்ராணாவஸ்தையிலேயே ஒரு ஜீவன் மணிக்கணகாகக இழுத்துக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?நமக்கு மற்றக் கார்யம் இருக்கத்தானே செய்யும்?அதனால் பக்கத்திலே பந்துக்களில் யாராவது ஒருத்தர் முறைபோட்டுக்கொண்டு உட்கார்ந்து நாம ஜபம் பண்ணும்படியாக ஏற்பாடு செய்துவிட்டு நாம், 'நம் கடமையைக் கொஞ்சமாவது செய்தோம்'என்று புறப்பட வேண்டும். குறைந்த பக்ஷம் சிவநாமாவோ, ராமநாமவோ 1008 தடவையவது நாம் ஒரு ஜீவனுக்காகச் சொல்லவேண்டும். இப்படிப் பலபேர் சொன்னது அந்த ஜீவனுக்குள்ளே போய் தானாக அது உள்நினைவில் பகவானை நினைத்துக்கொண்டிருக்கும் படியாகப் பண்ணியிருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷந்தான். நாம் கடைசிவரை இருக்கமுடியாமல் வந்துவிட்டாலும்கூட, ஒரு ஜீவன் பிரிகிறபோது அங்கு பகவந்நாம சப்தம் இருக்கும்படியாக அவனுடைய பந்துக்களையாவது ஜபிக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு வருவதே ச்லாக்யம்.


                                                                   --------தெய்வத்தின் குரல் -மூன்றாம்  பாகம் 

நண்பர்களே !.....ஜீவனின்  கடைசி  நேரம்  எவ்வளவு  முக்கியம்.......அதற்கு  இறை உணர்வினை    அளிப்பது   எனபது  பெரியவாவின்  சொற்களில் இருந்து  நம்மால்  அறிய முடிகிறது. நம்மால்  முடிந்தது  .......என்றில்லாமல்   வாய்ப்பு  கிடைத்தால்  நமது  கடமையாக   கருதி  அந்த  ஜீவாத்மாவை.........தெய்வ  ஸ்மரணையில்  உயிர் விட  உறுதுணையாக  அருகில்  அமர்ந்து  நாம ஜபம்  செய்வோம்.

நன்றி :  balahanuman's blog

No comments:

Post a Comment