Friday, October 17, 2014

ஜீவனே  சிவன் ,  சிவனே  ஜீவன் ........எப்படி ?  எப்போது ?



           ரமண  மஹா  குருவின்   அருளால்  நாம்   ஞான மலையாகிய   அக  நோக்கில்  ( விசாரத்தில் )  ஈடுபட ,   அவரின்   கருணை   என்ற   அந்த்மில்லாக்  கண்ணாகிய   நமது  ஸ்வரூபம்   மெல்ல  மெல்ல   புலப்படும்.

          ஆரம்பத்தில்   அறிவின்   துணைகொண்டு   முயற்சி  செய்கிறோம் ! அந்த  அறிவின்   துணையாலேயே   மலை  ஏறுகிறோம்.  சாதனை  முற்றுப்  பெறும்போது   அங்கு   அறிவுக்கு   வேலையில்லை. அப்போது   உலகளாவிய  பேரன்பு  தோன்றுகிறது.

           அறிவு  முற்றுப்  பெறுகின்ற  இடத்தே ,  அன்பு  விளைகின்ற   இடத்திலே  அநுபவம்   தோன்றுகிறது.  ஆன்மா  இறைவனுடன்   ஒன்றாகி ,  அன்பிலே  விளைகின்ற   ஆனந்தத்  தேனை   அநுபவித்து,   அதிலேயே   கரைகின்றது.

                     அம்புவில்  ஆலிபோல்   அன்புருவில்  எனை 
                                 அன்பாய்க்    கரைத்தருள்     அருணாசலா !

  என்று   பகவான்  பாடும்  அநுபவம்  இது.  அதுவே   பஞ்ச  பூதங்களுக்கும்  அப்பாற்பட்டு   கால ,  தேச  எல்லை  கடந்து  அநாதி  வெளியில்   விளைந்த  வெறும்  பாழ்  என்ற   மகோன்னத  நிலை.  அங்கு   ஆத்மாவைத்   தவிர  வேறு  பொருளே  இல்லாத  நிலை.  அதுவே   அருணகிரிநாதர்   குறிப்பிடும்   வெறும்  வெளி  !

                     பகவான்   வாக்கிலேயே  இதனைக்  காண்போம் !  ஆன்மாவில்  அகந்தை   கானாதலுடன்   ஜீவனின்    தனித்தன்மை   அற்றுப்போகிறது.   ஜீவன்   தன்   மூல  ஸ்வரூபமே   ஆகிறான்.   அங்கு   யார் ? எதற்கு ?  எப்படிச்  சரணடைவது ? இந்த   நிலையே   பக்தி , ஞானம்  , விசாரணை  அனைத்தின்  முடிந்த   நிலையாம்.

           யானே  என்னை  அறியகிலாதே 
           யானே   என்   தனதே   என்றிருந்தேன் 
           யானே   நீ   என்னுடைமையும்   நீயே 
           வானே   ஏத்தும்  எம்  வானவர்  ஏறே !            ( திருவாய்மொழி 2-9-9 ) 

என்று   இந்த  நிலையையே   நம்மாழ்வார்  எவ்வளவு  தெளிவாகக் கூறியிருக்கிறார்.

  பொருள் :   என்னையே   நான்   அறியாது  ,  நான்  என்றும் , எனது  என்றும்  மயங்கி  இருந்தேன்.  ( உண்மையை   ஆராயுமிடத்து ) -  நான் ,   நான்   என்பது  நீயேதான்.  என்  உடமை  யாவும்   நீயே.   அகண்ட  ஞானம்  பெற்றவர்   ஏத்தும்  பரம்பொருள்   நீயே ! ( பகவான்  நம்மாழ்வார்  பற்றிக்  குறிப்பிடல்.  பகவத் வசனாமிர்தம்  பக்கம் - 205- 207 ).

           மேலும்   பகவான்  கூறுகிறார்.  சரணடைய   முயற்சி  மேற்கொள்ளும்    போதெல்லாம்   அகந்தை   தலை  தூக்கும்.  அதனை   அடக்கி ,  ஒடுக்கவும்  முயல   வேண்டி  வரும், சரணாகதி   அவ்வளவு   எளிதான   காரியம்   அல்ல.
பரமனே   தனது   அருளால்   பக்தனின்  மனதை   உள்ளுக்குள்   இழுத்து   நிலை  நிறுத்தினால்   அன்றிப்  பூரண  சரணாகதி  நிலை   நிறைவேறுவது   கடினம்.
( Day  by  Day  with  Bhagavan   p.227. )

           ஆன்ம  ஞானத்தின்   சிகரத்தில்   இருந்து   பகவான்   கூறுகிறார்.  அகந்தை  என்பது  கூட    ஒன்று   தனியாகக்    கிடையாது   என்கிறபோது,   அது   எங்கிருந்து   எழும் ,  அதன்  மூலமாகிய   அஞ்ஞானமும்    இல்லை.  அகந்தையும்   இல்லை.  அதைப்  பற்றி  எழும்   பிரச்சனைகளும்,  துன்பங்களும்    சற்றும்  இல்லை  என்பதை   அறிவோம்.  அதைத்தான்   அகந்தை   அழிந்துவிட்டது   என்கிறோம்.  ( Talks   197  வசனாம்ருதம்  2.  பக்கம்  96 )   இதுதான்  வெறும்   பாழில்   விளைந்த   தனி   என்னும்   ஞானம்.

             நம்முள்ளே   ஊறி  வருகின்ற   இந்தப்   பரமானந்தம்   பெற   அவசரம்  ஏதும்   தேவை  இல்லை.  வேகம் ........விவேகத்திற்குத்   தடை ! ( வேகம்  கெடுத்து  ஆண்ட  வேந்தன்  அடி  வெல்க ! )  வேகம்   இருந்தால்  படபடப்பு ,  இருக்கும் , படபடப்பால்   நிறைய   தவறுகள்  நிகழும் ......எனவே   வேகம்  இருக்கும்வரை   உண்மையை   உணரவே   முடியாது.  எனவே   இத்தகைய  வேகம்     கூடவே     கூடாது.  அப்பொழுது   தான்   நம்  உள்ளத்தே     இறைவன்    அருள்  மெல்ல  மெல்ல  முகிழ்கிறது.

          மெல்ல  மெல்ல   இறைவனை   அறிக !  இறைவனின்   நாமத்தை   உச்சரிக்கும்  போதே   அது   நமது   உள்ளத்தில்   பதியும்படி  ஜபித்தல்   வேண்டும்.  ரமண  குருவினை    இதயம்  ஒன்றி   தியானித்தாலே    பரமானந்தம்   அரும்பும் .  மேலே   ஒன்றும்   இல்லாத ,  வேண்டாத   பரமானந்தம்   அது !

நன்றி  :  ரமணோதயம் ,  ஜனவரி  2012

No comments:

Post a Comment