Tuesday, October 7, 2014

எமன்  பெற்ற  சாபம் :


        நள்ளிரவில்  அரண்மனைக்குள்  புகுந்த  திருடர்கள்  விலை  உயர்ந்த  அணிகலன்களைத்  திருடிக்கொண்டு  ஓட்டம்  பிடித்தார்கள்.  விழித்த  வீரர்கள்  அவர்களைத்  துரத்தத்  தொடங்கினார்கள்.

       தப்பிக்க  நினைத்த  திருடர்கள்  அருகில்  இருந்த  காட்டிற்குள்  நுழைந்தார்கள்.  வீரர்களும்  அவர்களை  விடாமல்  துரத்தினார்கள் . அங்கு  ஓரிடத்தில்  மாண்டவ்யர்  என்ற  முனிவர்  தவம்  செய்து  கொண்டு இருந்தார்.

       மாண்டவ்யர்  கழுத்தில்  மிகவும்  விலை உயர்ந்த  முத்து மாலையைப்  போட்டான்  ஒரு  திருடன். பின்னர்  அவர்கள்  எல்லோரும்  அருகினில்  இருந்த  புதரினில்  பதுங்கி  மறைந்துகொண்டனர்.

        திருடர்கள்  எல்லோரையும்  வீரர்கள்  வளைத்துப்  பிடித்தார்கள். கழுத்தில்  மிக  உயர்ந்த  மலையுடன்  இருந்த  மாண்டவ்யரையும்  திருடன்  என்றே  நினைத்து  கைது  செய்தனர் .

       திருடர்களுடன்,  மாண்டவ்யரையும்  சேர்த்து  இழுத்துச்  சென்று  அரசனின்  முன்பு  நிறுத்தனார்கள். அரசனும்  உண்மையை  உணராது  எல்லோரையும்  கழுவில்  ஏற்றும்படி  கட்டளை  இட்டான்.

      எல்லோரும்  கழுவில்  ஏற்றப்பட்டனர். திருடர்கள்  எல்லோரும்  உயிரிழந்தனர்.  முனிவர் மட்டும் உயிரோடு  இருந்தார். இந்த  அதிசியத்தைக்  கண்ட  வீரர்கள்  அரசனுடன்  ஓடிச்  சென்று  சொன்னார்கள்.



     திடுக்கிட்ட  அரசன்  அங்கு  ஓடி  வந்தான்.  தவறுதலாக  முனிவருக்கு  தண்டனை  தந்ததை  எண்ணி  வருந்தினான்.
 கழுவில்  இருந்து  முனிவர்  கீழே  இறக்கப்பட்டார்.  வேதனையால்  துடித்துக்கொண்டு  இருந்த  முனிவரின்  கால்களில்  அரசன்  விழுந்தான்.
 " அறியாமல்  செய்த  பிழையை  மன்னித்து  என்னைக்  காத்து  அருள வேண்டும் " என்று   வேண்டினான்.

      அரசனை  மன்னித்து ,  பின்பு  எமன்  உலகம்  சென்றார் . அங்கு  எமனிடம்,
" எமக்கு  இவ்வளவு  கொடிய  துன்பம்  வரக்  காரணம்  என்ன ? " என்று  வினவினார் .

      எமனும்,  " நீங்கள்  சிறுவனாக  இருந்த  போது , தும்பி  ஒன்றைப்  பிடித்து  அதை  ஈரக்  குச்சியில்  குத்தி ,  வாலைக்  கோர்த்து  விளையாடினீர்கள்.  அந்த  தும்பி  பட்டத்  துன்பத்தை  நீங்கள்  பட வேண்டும்  எனபது  விதி.  அதனால்தான்  தங்களுக்கு  இந்த  பிறவியில்  இந்த  துன்பம்  நேர்ந்தது. "  என்று   கூறினார்.

    மாண்டவ்யரும்,  " எமனே ! பிள்ளைப்  பருவத்தில்  அறியாமையால்  செய்த  பாவத்திற்கு  இவ்வளவு  கொடிய  தண்டனையா ?  இப்படி  விதித்த  நீயும்,  இதற்கு  உரிய  தண்டனையாக  பூமியில்   மனிதனாகப்  பிறப்பாயாக .......!" என்று   சாபம்  தந்தார்.

   இவ்விதம்  சாபம்  பெற்ற  எமனே  விதுரனாகப்  பிறந்தார்  என்கிறது  உபநிஷத்.


No comments:

Post a Comment