Wednesday, October 8, 2014

தானம்  -  தர்மம் : வித்தியாசம்  என்ன ?

                          

      சந்நியாசிகள்   யாரிடமும்   எதனையும்   யாசிக்கக்கூடாது.  எந்தக்  காரியத்திற்கும்  பகவானைத்  தவிர  வேறு  யாரையும்  சார்ந்திருக்கக்கூடாது  என்ற  கொள்கைகளைக்  கடைப்பிடித்து  வந்தவர்,  ஸ்ரீ  சைதன்ய  மகா  பிரபு.
கால, நேரம்   தவறாமல்   ஸ்ரீ ராதா  கிருஷ்ணனை  வழிபட்டு  வரும்  தெய்வீகப்  புருஷர்.

           அவரது  ஆஸ்ரமத்தில்   ஒரு  நாள்   தினசரி  வழிபாட்டுக்குரிய  நைவேத்தியப்   பொருட்கள்  இல்லை.

          எனவே  மகாப்  பிரபுவின்   சீடர்  ஒருவர்  பக்கத்து  இல்லத்தில்  அம்மையார்  ஒருவரிடம்   அன்றைய  வழிபாட்டிற்கு   நைவேத்தியப்  பொருட்கள்   தந்து   உதவும்படி   கேட்டார்.

         அந்த  அம்மையார்  கிருஷ்ண   பக்தை   ஆதலால்  உடனே  அரிசி , சர்க்கரை , பால்  கொடுத்து   வழிபாட்டை   நடத்தினார்.

         வழிபாட்டின்போது   அங்கு  வந்த   ஸ்ரீ  சைதன்ய  மகா  பிரபு,
 " நைவேத்தியம்   செய்ய   பொருள்   எப்படிக்  கிடைத்தது ? "  என்று  கேட்டார்.

        சீடர்   தாம்  அம்மையாரிடம்   வாங்கி  வந்ததைக்  கூறினார்.

      உடனே  ஸ்ரீ  சைதன்ய  மகா  பிரபு, " நீ  செய்தது  தவறு.  அந்த  அம்மையாரிடம்   இருந்த  நம்பிக்கை   உனக்கு   இந்த  கண்ணனிடம்  இல்லையா ?  அவனுக்கு   நைவேத்தியம்  செய்ய  பொருள்  இல்லையென்றால்   அவனிடமே   கேட்டு  இருக்கலாமே !  அதற்காக ,  சந்நியாச   தர்மத்தை  மீறி , ஒரு  வீட்டினில்   போய்   ஏன்   கேட்க வேண்டும் ?"
என்றார் .

        சீடருக்கு   ஒன்றும்  புரியவில்லை . ( நம்மைப்  போலவே ..........! )

   " பகவானுக்கு   நைவேத்தியம்  செய்ய  பகவானிடமே   கேட்பதா ?  அப்படிக்  கேட்டால்  மட்டும்  பொருட்கள்  தாமாகவே  வந்துவிடுமா ? "  பயத்தோடு , பணிவுடன்   கேட்டார்.

    அதற்கு  ஸ்ரீ  சைதன்ய  மகா  பிரபு,  " நீ  பகவானிடம்  கேட்டிருந்தால்   இந்த  நைவேத்தியத்திற்கு   சாமான்களைக்  கொண்டு  வந்து   தந்திருப்பார்.   நீ  போய்  அடுத்த  வீட்டினில்  கேட்க  வேண்டியிருக்காது.

      மேலும் ,  தானாகவே   மனமுவந்து   கொடுப்பது  தானம்.  அதற்கே  பலனும் அதிகம்.

     கேட்டுத்  தருவதே   தர்மம். அதில்  அவ்வளவு  சிறப்புமில்லை.  நீ   கேட்டு  நைவேத்தியப்  பொருட்களின்   மதிப்பையும்  குறைத்துவிட்டாய் ! "  என்று  அருளினார் . 

     

No comments:

Post a Comment