Friday, October 17, 2014

அறிவு  வேறு ;  படிப்பு  வேறு :

             
  
              அது  ஸ்ரீரங்கம்.  எங்கும்   துளசியின்  மணம்   வீசும்  தெருக்கள் . இரவு  வேளை.  அந்தப்   பெரியவர்   வேகம்   வேகமாக   நடக்கிறார்.  அவரது   சீடர்கள்   பதுங்கிப்   பதுங்கி    அவரைப்   பின்  தொடர்ந்தார்கள்.  ஊருக்கு   ஒதுக்குப்  புறமாக   ஒரு   குடிசை.  அதற்குள்   நுழைந்து   கதவைச்   சார்த்திக்  கொண்டார்.

                           தமது   குருநாதர்   இரவு  நேரத்தில்,  யாரிடமும்   சொல்லிக்கொள்ளாமல்   புறப்பட்டு   வந்து,  ஊருக்கு   ஒதுக்குப்  புறமான   இடத்தில்   உள்ள   குடிசைக்குள்   நுழைந்து   கதவைச்   சார்த்திக் கொண்டால்,  அந்த   சீடர்களுக்கு   மனம்   எப்படி  இருக்கும் ?   பரபரப்பான  ..........கற்பனைகள்  ஓட ,  ஓலைகளின்   இடுக்கு  வழியே   உள்ளே   பார்க்க .......


                   மங்கலான   வெளிச்சத்தில்,  கட்டிலில்   கிடக்கும்   அந்த  மெலிந்த  உருவத்தை   மெல்லத்   தாங்கி   எடுத்து    உடலைத்   துடைத்து   சுத்தப்படுத்தி,
உணவு   ஊட்டிவிட்டு ,  பணிவிடைகள்   செய்கிறார் .........குருநாதர் !

                  மாறனேறி   நம்பிகள்   என்ற   நோயுற்ற  கீழ்க்குலத்தைச்  சேர்ந்த  வைணவர்   ஒருவருக்கு    பெரிய  நம்பிகள்    என்ற   அந்தண  வைணவர்  தான்   இந்த   அரும்பணியை   செய்த   அன்பர்.  ( அக்காலத்தில்   ஜாதி  பேதங்கள்  நிறைந்ததாக    ஸ்ரீரங்கம்  இருந்தது )  செய்தி   காட்டுத்தீயை   விட   மிகவும்   வேகமாகப்   பரவியது.

               கீழ்க்குலத்தவரைத்   தொட்டுப்   பணி   செய்யும்   அந்தண   நம்பிகளை   என்ன  செய்வது ?  ஜாதிப்ரஷ்டம்    செய்வதா ?  விசாரணை   நடத்துவதா ?
இப்போது   ஸ்ரீரங்கத்தில்   தேர்த்  திருவிழா   வேறு ......

              இப்படியே   விடக்கூடாதே !  இவரைத்   தண்டித்தே   ஆகவேண்டுமே ! ஸ்ரீரங்கமே   கூடி   விவாதித்து   தீர்ப்பு   வழங்கியது !

            " ரங்கனின்   தேர்   பெரிய  நம்பிகள்   வீட்டு   வாசலில்   நிற்கக்  கூடாது; இடைக்கால   அவமானமாக   இது   இருக்கட்டும் ! " என்று   தீர்மானம்   ஆனது.

             கருணைக்  கடல்   தேர்   ஊர்ந்து  வந்த  சமயம்,  பெரிய  நம்பிகளின்  திருமகள்   அத்துழாய்,   கண்களில்   நீர்மல்க ,  கதவைப்   பிடித்தபடியே   வெளியில்   பார்த்தவள் ,  வாய்  திறந்து   புலம்பினாள் !

            "  எல்லோரும்   எம்மை   விலக்கினர்........ரங்கா!....ரங்கா !  நீயும்   எமக்கு   விலக்கோ ! "  என்றாள்.

           அச்சு  முறிந்து   தேர்   வீட்டு   வாசலிலேயே   நின்று  விட்டது !  பத்து  நிமிடம்   அல்ல !..........பல மணி  நேரம்   பகவான்   அங்கு  நின்றார் ....நின்றார் !

       ஆம் !  கேள்வி   ஞானம்   அல்ல !  வாழ்க்கை  ஞானம்  இதுவே !


                                                  


நன்றி :  திரு. சுகிசிவம் ,  நல்லவண்ணம்   வாழலாம்.
               

No comments:

Post a Comment