Friday, September 12, 2014

அருளே வடிவான அன்னை!

அன்னையைப்  பற்றி  ஸ்ரீ ராம கிருஷ்ணர் :

                  

           சில நேரங்களில்  ஸ்ரீராமகிருஷ்ணரைப்  பெண்கள்  சூழ்ந்து  கொண்டு' அவரது  அனுபவங்களைக்  கேட்பார்கள். அவர்களுடன்  அன்னை  சாரதையும்  வந்து  அமர்வார்.  குருதேவர்  பேசுவதைக்  கேட்டுக்கொண்டே  சில  நேரங்களில்  அன்னை  தூங்கிவிடுவார். மற்றவர்கள்  அவரை  எழுப்ப  முற்படும்போது  ஸ்ரீராமகிருஷ்ணர்  அவர்களைத்  தடுப்பார்.

        "  அவளை  எழுப்பாதீர்கள்! அவள்  எல்லாவற்றையும்  கேட்கத்  தேவையில்லை.  அவள்  மட்டும்  விழித்துக்கொண்டு  நான்  கூறுவதைக்  கேட்டால்,  அவள்  நம்மிடையே  இருக்க மாட்டாள். தன்  உண்மைச்  சிறகை  விரித்துக்கொண்டு,  தனது  இருப்பிடத்திற்கு  பறந்து  போய்விடுவாள் "  என்றார்.

                                             

       ராது  ஒருமுறை  அன்னையை  காலால்  எட்டி  உதைத்துப்  பழியை  அவர்மீதே   போட்டாள்,  " அடக் கடவுளே!  நீ  என்  காலைத்  தொட்டுவிட்டாயே, என்  கதி  என்னவாகும் ? "   என்று  கேட்டாள்.

      அப்போது,    அங்கு  வந்த  பிரம்மச்சாரி  ராஷ்பிஹாரி,  " பைத்திய  மாமி
 ( ராது )  அன்னையை  அவமதித்தாலும்,  ஏசினாலும்  தன்  கால்  அன்னையின்  மீது  பட்டதற்குப்  பயப்படத்தான்  செய்கிறாள் "  என்றார்.

      அன்னை  உடனே,  " மகனே,  ராமன்  சாட்ஷாத்  நாராயணன்,   சீதைதான்  மகாலட்சுமி  எனபது  ராவணனுக்குத்  தெரியாதா...... என்ன ? ஆனாலும் , அவன்   அவனது  பாத்திரத்தை  நடித்தான்.  அதுபோல்  இவளுக்கும்  என்னைத்  தெரியாதா !  நன்றாகத்  தெரியும்.  ஆனால்,   அவள்  இந்தப்  பாத்திரத்தை   நடிக்கவே   பிறந்துள்ளாள் "  என்றார்.

                                             
                                             

      அன்னை  ஒருநாள்  காலையில்  சாணமிட்டு , வீட்டை  மெழுகிக்கொண்டு இருந்தார்.  ஸ்ரீராமகிருஷ்ணர்   வேப்பங்குட்சியால்  பல்  துலக்கியவாறே  கேலியும்,  கிண்டலுமாகப்  பல்வேறு  விஷயங்களைக்  கூறிக்கொண்டிருந்தார்.

     இடையில்  அவர்,  "  முதல்  குழந்தை  பிறந்ததும்  ஒரே  அமர்க்களம்.  ஆடை  என்ன !  ஆபரணம்  என்ன !  ஆனால்  அக்குழந்தை  இறக்கட்டும். பின்  கண்ணீரும்,  கம்பலையும்  தான் "  என்றார். அன்னை  எதுவும்  கூறாமல்  வேலையைத்  தொடர்ந்து  கொண்டிருந்தார்.

       ஸ்ரீராமகிருஷ்ணர்  விடாமல்  அன்னையைத் தூண்டுவது  போல்  குழந்தைகள்  இறந்துபோவது'  பற்றியே  பேசினார். அன்னையால்  பொறுக்கமுடியவில்லை. " பிறக்கின்ற  குழந்தைகள்  எல்லாமா  இறக்கின்றன ? "  என  மெல்லிய  குரலில் , ஆனால்  உறுதியாகக்  கூறினார்.

       அவ்வளவுதான்,  ஸ்ரீராமகிருஷ்ணர்   உடனே,  " ஐயோ!  அப்பா!   உண்மை  தெரியாமல்  நல்லபாம்பின்  வாலையல்லவா  மிதித்துவிட்டேன் !  எளிமையானவள் ,  வெகுளி  என்றெல்லவா  நினைத்திருந்தேன்!  இவளோ  இப்படி  நறுக்கென்று  கேட்கிறாளே,  ஆஹா ! "  என்று  மகிழ்ச்சியுடன்  கூவினார்.

       அன்னை  அங்கிருந்து  அகன்றுவிட்டார். அன்னையைக்  கேலி  செய்து  பேசினாலும்,  அவரிடம்  பொங்கிப்  பிரவகித்த  தாய்மை  உணர்வை  குருதேவர்  கவனிக்கத்தவறவில்லை.

       " இவள்  ஓரிரு  பிள்ளைகளுக்கு  மட்டுமே  தாய்  ஆகப்  பிறந்தவளல்ல.  உலகனைத்துக்குமே  தாயாகி .....தாய்மையின்  பெருமையை  உலகுக்குக்  காட்ட  வந்தவள் " என்று  அன்னைக்கு  உணர்த்தும்  வாய்ப்ப்பை  எதிர்நோக்கிக்  காத்திருந்தார்  குருதேவர்.


நன்றி :  ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம் , டிசம்பர்  2003.

No comments:

Post a Comment