Friday, September 5, 2014

பெரியவாளின்  விளையாட்டு:


பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர்ணமி’ என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகள், அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.

ஒரு வபன பௌர்ணமியன்று மஹாபெரியவாளுக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் வபனம் செய்து கொள்ளவில்லை. ஒரு வபன பௌர்ணமி தவறினால், அடுத்த வபன பௌர்ணமி வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால், பெரியவாளுக்குத் தலைமுடியும் தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.

அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து பெரியவா ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, ஒரு தம்பதிகள் அவசரமாகத் தரிசனத்துக்கு வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து, அவர்களைப் பார்த்தே, “ஸ்வாமிகள் எங்கே?” என்று கேட்டார்கள்.

பெரியவா கொஞ்சமும் பதற்றப்படாமல், “ஸ்வாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை” என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள். வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஸ்வாமிகளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே!

எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.

அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி, “அதோ இருக்காளே!” என்று கூறியதும், தம்பதிகளுக்கு உடல் வெலவெலத்துவிட்டது. ‘எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம்?’ என்று தவித்துக் கொண்டிருந்தபோது, பெரியவாளே அவர்களைக் கூப்பிட்டு, அருகில் உட்காரச் சொன்னார்கள்.

”தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தான் உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை…” என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை சமாதானமாகப் பேசி, பிரசாதம் கொடுத்தார்கள்.

பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்பப் பிடிக்கும்!

அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத் தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! நமக்கும்தான்!

No comments:

Post a Comment