Friday, September 5, 2014


புரந்தரகேசலு : மஹா  பெரியவரை  உருக  வைத்த தெலுங்கு சிறுவன்



ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது. கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. 'சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்'. ' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லிவிட்டார்..மேற்கொண்டுநடக்க முடியாதபடி மழை பலத்தது.

ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல, மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா.

ஏழு,எட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறுவென்று கொட்டகை போடப்பட்டது.

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று...

பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'சுவாமி ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டார்.

பதினொன்னரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே'??? த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா.

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பறிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. '' யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம் வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'

' ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா இசை பிரவசனம் பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது??? .

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் ' 'அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!' சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார்.

'ஆமாம்! பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டு வச்ச வில்வக்கூடை தான் இது.' ' யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன் தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்.

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான்.

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.

'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?

'புரந்தர கேசவலு''ங்கய்யா.

'தமிழ் பேசறியே எப்படி??'

'அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு. ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.

''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே; உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??'

'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாரு '' ஏலே புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் பேசிக்கிட்டாங்க. சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க''

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார்.

'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார்.

'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதை கேக்கணும்''. மஹா பெரியவா புலகாங்கிதமானார். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன் நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

' சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தரா உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார்.




பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. ......பெரியவா கரையேறினா.

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' .

ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

''  அந்த புரந்தர கேசவன் இப்போ இல்ல!  சித்த  முன்னாடிதான்  காலகதி  அடஞ்சுட்டான்.  நா  அவா  ஊருல போய்த்   தங்கியிருந்து  கிளம்பற  அன்னைக்கு,  'எனக்கு  நீங்க  மோட்ஷம்  வாங்கி  கொடுக்கணும்னு  கேட்டான்.'  . "சந்திரமௌலீஸ்வர  ஸ்வாமி   கிருபையால  உனக்கு  அது  கிடைக்கும்"னேன்.  திடீர்னு  அவனுக்கு ஏதோ  விஷக் காய்ச்சல்  ஏற்பட்ருக்கு.

மோட்ஷத்தையே   நெனச்சுண்டு   அவதிபட்ருக்கான். கிரமமா  அவன்  மோட்ஷத்துக்கு  போய்ச்சேருணும்னா    இன்னும்  ஆறு  ஜன்மா  ( பிறவி )
எடுத்தாகணும்.  எப்படியாவது  அவன்  மோட்ஷம்  அடையணும்னுருக்காகத்தான்   ஜபம்  பண்ணி  பிராத்திசேன்.  புரந்தரகேசலு  ஒரு  நல்ல  ஆத்மா! "  என்று  சொல்லிவிட்டு,  விடுவிடு  என்று  மடம்  நோக்கி  நடக்க  ஆரம்பித்தார்  மஹா  ஸ்வாமிகள்.

குளத்தின்  படிக்கட்டில்  நின்றிந்த  மடத்து   ஆசாமிகள்  பிரமித்து  போய்  இருந்தனர்.

No comments:

Post a Comment