Thursday, September 4, 2014

பாட்டி  பண்ணின  லஷபோஜனம்:

 

ஒரு ஏழை பாட்டி. பெரியவாளிடம் அபார பக்தி. கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும் சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தாள். மடி ஆசாரம் பார்பாள். ஏராளமான பக்தி.

தினமும் பெரியவா இருக்கும் இடத்தை சுத்தம் செய்வார். கோலம் போடுவார். தீபம் ஏற்றி வைப்பாள்.

இரண்டு புடவைகள் தான் அவருடைய ஆஸ்தி. இன்னொரு புடவை வாங்கக் கூட அந்த பாட்டியிடம் பொருளில்லை.

ஒரு பக்தர் அரிசிக் குறுணையும் வெல்லமும் பெரியவாளிடம் சமர்ப்பித்திருந்தார். அவற்றை நல்லபடியாக வினியோகம் செய்ய வேண்டுமே?

பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.

“காஞ்சீபுரத்திலே உள்ள இல்ல எறும்பு புற்றுக்களிலேயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா. அரை ஆழாக்கு வீதம் போடு…” என்றார்கள்.

அந்த பாட்டியும் பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து, பல எறும்புப் புற்றுக்களில் அரிசிக் குறுணையும் வெல்லமும் போட்டு விட்டு வந்தாள். அந்த வேலை முடிந்ததும் பெரியவா அந்த பாட்டியை கூப்பிட்டார்கள்.

அங்கு இருந்த பெரிய மாலை போன்ற திரியையும், ஒரு டின் நிறைய எண்ணையும் காண்பித்து, எல்லா கோயிலுக்கும் போய், எவ்வளவு விளக்கு போட முடியுமோ, அவ்வளவுக்கு போடு, ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று கோயில்லுக்குப் போனால் போதும்’ என்றார் பெரியவா.

பாட்டிக்குப் பரம் சந்தோஷம். பரம் சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயிகளுக்குச் சென்று பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள். சில நாட்களில் இந்த கைங்கரியம் நிறைவு பெற்றது. அந்தச் செய்தியையும் பெரியவாளிடம் தெரிவித்தாள் பாட்டி.

பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப் பின், ஒரு பெரிய மனிதர் ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார். பெரிய மனுஷத் தோரனை. அகங்காரம்.

“ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன், லட்சதீபம் போட்டிருக்கேன்” என்று தற்பெருமை தொனிக்க பெரியவாளிடம் சொன்னர்.
பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது. தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதை பற்றிப் பேசிக் கொள்வது புண்ணியத்தை தராது. தர்மம் செய்தவருக்கு நற்பலஙள் கிடைக்காமல் போய்விடும்.

வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால், அந்தப் பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.

பெரியவா சொன்னர்கள்

“இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்ம லக்ஷபோஜனம் செய்திருக்காள். பல லக்ஷதீபம் போட்டிருக்கா…

ஆணவப் பணக்காரருக்கு சற்று திருக்கிட்டது. ‘யார் அந்த பாட்டி.. அவ்வளவு பெரிய பணக்காரி? என்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது. பெரியவா அந்த பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.

“இவள் தான் அந்த பெரிய உத்தமமான காரியம் செய்தவள்”

அழுக்கான கிழிசல் புடவையை கட்டிக் கொண்டு வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர் அயர்ந்து போனார்.

பெரியவா சொன்னார்கள்:
“ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார். ப்ரும்மா முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான் இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.
“ நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய். ஆனால், இந்த பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு ஆகாரம் போட்டிருக்கிறாள்.

‘ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம் கொடுத்திருக்கே. அவ்வளவு தீபத்துக்கும் எண்ணெய் – திரி போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்த பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள். பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தன் கையாலேயே தீபம் ஏற்றியிருக்கிறாள்…”

அதை கேட்ட பிரமுகர் தலைகுனிந்தார். பெரியவாளிடம் பவ்யமாகவும் அகங்காரமில்லாமலும் பேச வேண்டும் என்பதை புரிந்து கொண்டார். பின்னால் பல பக்தர்கள் வந்து நிற்பதை பார்த்து சற்றே நகர்ந்து இடம் கொடுத்தர்.
சிறிது நேரம் கழித்து உம்மாச்சி தாத்தா அந்தப் பெரிய மனிதரை கூப்பிட்டு, உட்கார வைத்து, பல சமாச்சாரங்கள் பேரி, ப்ரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

No comments:

Post a Comment