Thursday, September 4, 2014

அன்பரின்  தம்பட்டம்  அடங்கியது:



கல்வித்துறையில் ரொம்ப பெரிய போஸ்டில் இருந்தவர் ஒருவர் மடத்துக்கு அடிக்கடி வருவார்.

ஒருதடவை அப்படி வரும் போது தன்னுடன் இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்து வந்தார். வந்தவர், வெறுமனே அவர்களுடன் வரவில்லை, கூடவே "தன்னை நாடி இங்க்லாண்டிலிருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள்!" என்ற பெருமிதம் தலைக்கேற வந்தார்.

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு "இவா ரெண்டு பேரும் லண்டன்ல ரிஸர்ச் பண்ணிண்டிருக்கா.... almost எல்லா சப்ஜெக்ட்லேயும் புகுந்து வெளையாடியிருக்கா....பொதுவாஇங்க்லீஷ்காராளே ரொம்ப புத்திசாலிகள்! அதுலேயும் இவா ரெண்டு பேரும் ரொம்ப intelligent! பிஹெச்.டி பண்ணியிருக்கா... இங்க்லீஷ்லதான் வர்ஷாவர்ஷம் புதுசுபுதுசா வார்த்தைகள் சேர்ந்துண்டே போறதே! புது scientific வோர்ட்ஸ் நெறைய கண்டு பிடிச்சிருக்கா. அதான், அந்த பாஷை தேங்கிப் போய் பாஸி பிடிக்காம pureஆ இருந்துண்டு இருக்கு..."

இங்க்லிஷுக்கு ஒரு ஸ்தோத்ரமே பண்ணிவிட்டார் !

யார் முன்னால் பேசினாலும் டம்பம் இல்லாமல் அடக்கமாகப் பேசவேண்டும். அதுவும் ஞானக்கடலான பெரியவா மாதிரி மஹான்கள் முன்னால், தெரிந்தாலும் பேசாமல் அடக்கமாக இருப்பதுதான் சிறப்பு.

தலைகால் தெரியாமல் அதிகம் பேசுவது நம்முடைய மடமை. ஏனென்றால் யார் முன் பேசுகிறோம்! ஒரு வழியாக அவர் மூச்சு விட சற்று நிறுத்தியதும், ஞான சாகரத்திலிருந்து ஒரு துளி வெளியே வந்து விழுந்து அங்கிருந்தோரைத் திணற அடித்தது.

"ஆமாமா....இங்க்லிஷ்காரன் ரொம்...ப புத்திசாலிதான்! நாம என்ன பண்றோம்? பாலைத் தயிரா ஆக்கறோம். அது ஸ்வபாவமா நடக்கறது. ஆனா, தயிரைப் பாலா மாத்தறதில்லே; ஏன்னா.....அது முடியாத விஷயம்.

அதுனாலதான் அக்ஞானிகளான நாம, அந்த மாதிரில்லாம் முயற்சி பண்றதில்லை. ஆனா, இங்க்லிஷ்காரன் புத்திசாலியோன்னோ.... "இதோ, தயிரைப் பாலாக்கி காட்டறேன்"..னான்! Butter Milk ன்னு ஒரு வார்த்தையை கண்டுபிடிச்சுட்டான்! பாத்தியா! எவ்ளோ..வ் சுலபமா butterஐ மில்க் ஆக்கிட்டான்!

நாம என்னவோ அதை "மோர்"ன்னு சொல்றோம்; milk ன்னு சொல்றதில்லே".... புன்சிரிப்புடன் பெரியவா சொன்னதும் கல்வித்துறையின் முகத்தில் ஈயாடவில்லை. சுற்றி இருந்தவர்கள் இந்த விளக்கத்தை கேட்டு, அதிலிருந்த "இதுநாள் வரை காணத் தவறிய" உண்மையை உணர்ந்து புன்னகைத்தனர்.

அந்த வெள்ளைக்கார மாணவர்களோ, பெரியவா சொன்னதை மொழி பெயர்த்து கேட்ட பின்,

"Oh ! My God ! It is not a butter research; but a better research!....." என்று ஆச்சர்யப்பட்டு மிகவும் ரசித்தார்கள்.

No comments:

Post a Comment