Friday, September 5, 2014

வீணை  வித்வானின் " யாருக்குத்  தெரியப்போறது "


சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார். முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும். பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அப்போது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர். பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்கஆரம்பித்தார். இவர் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள். வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொன்னார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'அப்புறம் நான் அதை வாசிக்கலாமா?', என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன? வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார். 'இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.' 'சரியா இருக்கு!'.

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். 'க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும்' என்று கதறினார். அடுத்த பத்து நிமிடங்களில் ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. 'தப்பு பண்ணிட்டேன், க்ஷமிக்கணும்' என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார். வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார்.

'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"

வீணை வித்துவான் ஏன் அழுதார்? காரணம் இதோ:

ராவணனின் ஸாம கானம் வந்த போது, அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து, 'யாருக்கு இது தெரியப் போகிறது?', என்று நினைத்து, வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார். பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ, அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதைப் புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்? 'யாருக்குத் தெரியப் போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர். அவருக்கு தெரியும்ன்னு தோணாமப் போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்!', என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.

No comments:

Post a Comment