Thursday, September 4, 2014

நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்!




1935 அக்டோபர் 27 ஆம் தேதி அமாவசை, கல்கத்தாவுக்கு தென்மேற்கில்
 சுமார் அறுபது மைல் தூரத்தில் உள்ள மிட்னாபூருக்கு விஜயமானார்கள். அப்பொழுது ஒரு துறவி பெரியவாளை தரிசித்தார். மறு தரிசனம் எப்போது என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் என்றது அந்த பரம்பொருள்.

அந்த துறவியும் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருந்தார்…எப்பொழுது பதினைந்து வருஷங்கள் முடியும் என்று…
அந்த நாளும் வந்தது…

விழுப்புரம் அருகில், முகாம். அன்று ஐயன் வடவாம்பலம் சென்றிருந்தார். இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…என்று குதி குதி என்று குதித்தார்.

ஐயனுக்கு பணிவிடை செய்யும் அன்பர் ஒருவர், நீங்கள் துறவி, சற்று காத்திருங்கள். இதோ, இப்போது வந்து விடுவார். நீங்கள் கோபம் காட்டலாமா என்று கூறி இருக்கிறார். நீங்கள் என்ன கொக்கா? என்றும் விசனப் பட்டிருக்கிறார்.

இதற்கு இடையே, ஐயன் வெகு வேகமாக வேகு வேகு என்று வயல் வரப்புகள், கரும்புக் காடுகள் வழியாக மிக வேகமாக நடந்து வந்து முகாம் அடைந்தார்.

அந்த துறவிக்கு அத்தனை சந்தோஷம். எங்கேயோ, எப்போதோ, கொடுத்த வாக்கை காப்பாற்ற இன்று இத்தனை சிரமப்பட்டுக் கொண்டு வந்து தனக்கு தரிசனம் கொடுக்கும் மஹா பிரபுவிடம் தர்சனம் பெற்று திரும்பப் போகிறார்.

எந்த அடியார் சற்று முன் இந்த மிட்னாப்பூர் துறவியிடம் கோபம் கொண்டாரோ, அவரையே அழைத்து, ஐயன், ‘நீ இவருக்கு வழியிலே ஏதாவது வயித்துக்கு வாங்கிக் கொடுத்து, சேந்தனூர் ரயிலடியிலே வண்டி ஏத்தி விட்டுடு’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

வழியில் அந்த மிட்னாப்பூர் துறவி கேட்டார், நம் அடியாரிடம்…

‘நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.  

No comments:

Post a Comment