Thursday, September 4, 2014

பாம்பே  சகோதரிகளின்  அனுபவம் :

30, 35 வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை மைசூர் அருகே ஹாசன் என்ற ஊரில் கச்சேரி செய்யப் போயிருந்தோம்.  ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தார்கள்.  கிழிந்த ஆடை, கலைந்த தலையுடன் பார்த்தாலே பரம ஏழையாகத் தெரிந்த ஒருவர் வந்து பார்வையாளர்களிடையே அமர்ந்தார்.  “ஆடியன்ஸைப் பார்த்தியா !  எல்லாம் தலைவிதி.  இவங்களுக்கெல்லாம் சங்கீதம் எங்கே புரியப்போகிறது ?”  என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.  அது தவறு.  ஒரு விதத்தில் திமிர் என்று கூடச் சொல்லலாம்.  எத்தனையோ பேர் இருக்க அவரை மட்டும் பார்த்து அவ்வாறு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பல கன்னடப் பாடல்களைப் பாடிய பின்னர், “ஹரி சித்த சத்திய மர சித்த கே லவலேச”  என்ற தாசர் நாமாவைப் பாடினோம்.  அதன் பொருள்,  ‘மனிதன் நினைப்பது எதுவும் நடக்காது.  எல்லாம் அந்த ஹரி என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும்.  அதுதான் ஸத்யம். ஆகவே உனக்குக் கஷ்டம் வந்தால் ஹரியை நினை.  அவன் எல்லாவற்றையும் தீர்த்து வைத்து விடுவான்.  நீயாக ஒன்றும் தீர்மானம் பண்ணாதே‘  என்பது.  நாங்கள் அதைப் பாடப் பாட அவரது கண்களில் கண்ணீர்.  அவர் அழுவதைப் பார்த்ததும் எங்களுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும் ஓடோடி வந்த அவர் எங்களைக் கைகூப்பி வணங்கினார்.  கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.  உடல், கை, கால் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன.  நாங்கள் பதறிப்போய், “என்ன இது ?  எங்களைவிட நீங்கள் வயதில் மூத்தவர்.  இப்படிச் செய்யலாமா ?”  என்று கடிந்து கொண்டோம்.  அதற்கு அவர், “அம்மா,  நான் உங்களை நமஸ்காரம் செய்யவில்லை.  உங்கள் ரூபத்தில் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியைப் பார்க்கிறேன்.  அவளுக்குத்தான் நமஸ்காரம் செய்தேன்.  என்னமாகப் பாடி விட்டீர்கள்!  புரந்தரதாசரின் பாடல்களை சாமான்யர்களுக்கும் புரிய வைத்து விட்டீர்களே”  என்று சொல்லிக் கண்கலங்கி விடைபெற்றார்.
நாங்கள் அவரைச் சங்கீத ஞானமில்லாதவர் என்று நினைத்தோம்.  ஆனால் அவர் ஞானம் என்றால் என்ன என்று எங்களுக்கு விளக்கி விட்டுப் போய்விட்டார்.  இனிமேல் தோற்றத்தைப் பார்த்து யாரையும் எடை போடக் கூடாது என்று முடிவு செய்தோம்.  அது பகவான் எங்களுக்குப் புகட்டிய பாடம்.
–நன்றி தென்றல் மாத இதழ் (Feb, 2011)
நன்றி :balhanuman's blog

No comments:

Post a Comment